குட்பை மெசேஜ்கள்.. பதறியடித்த நெட்டிசன்கள்.. தடை செய்யப்படுமா டிவிட்டர்?.. இனி என்ன நடக்கும்?
சென்னை: மத்திய அரசின் புதிய ஐடி விதிகள் காரணமாக டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தடை பெறுமா என்று அச்சம் நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய அரசு இந்த புதிய விதிகளை பின்பற்ற கொடுத்த காலக்கெடு நேற்றோடு முடிந்த நிலையில் இனி என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
இந்தியா முழுக்க கொரோனா வேகமாக பரவி வருகிறது, தினசரி கேஸ்கள் இந்தியா முழுக்க குறைந்தாலும் கூட, மரணங்கள் இன்னும் குறையவில்லை. கொரோனா ஒரு பக்கம் குறைத்தாலும் கூட நேற்று நெட்டிசன்கள் எல்லோருக்கும் இருந்த ஒரே கவலை, டிவிட்டர், வாட்ஸ் ஆப் எல்லாம் தடை செய்யப்படுமா என்பதுதான்.
மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்றாத காரணத்தால் இந்த சமூக வலைத்தளங்கள், மற்றும் ஓடிடி தளங்கள் தடை பெறுமா என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், மக்கள் இடையே இந்த பீதி ஏற்பட்டுள்ளது.
விதி
மத்திய அரசின் புதிய ஐடி விதி குறித்து சுருக்கம் பின்வருமாறு,
இந்த புதிய விதி மூலம் எல்லா சமூக வலைதள நிறுவங்கள், ஓடிடி தளங்கள் கண்டெண்ட்கள் குறித்த புகார்களை விசாரிப்பதற்காக இந்தியர் ஒருவர் அதிகாரியாக நியமிக்க வேண்டும். அதேபோல் புகார்கள், கண்டெண்ட்கள் குறித்து விசாரிப்பதற்காக மத்திய அமைச்சர்கள் அடங்கிய தனி குழு நியமிக்கப்பட வேண்டும். சமூக வலைதள நிறுவனங்கள், ஓடிடி தளங்களில் எந்த போஸ்ட்கள், கண்டெண்ட்கள், வீடியோக்களை நீக்க வேண்டும் என்று இந்த குழுவே இறுதி முடிவு எடுக்கும்.
மறுப்பு
இதுதான் விதி. இந்த விதி மூலம் மத்திய அரசு ஒரு போஸ்ட் அல்லது வீடியோவை டெலிட் செய்ய சொன்னால், அல்லது போஸ்ட் செய்தவர்கள் பற்றிய தகவலை கேட்டால் உடனே அதை மத்திய அரசுக்கு சமூக வலைத்தளங்கள் கொடுக்க வேண்டும். இந்த விதியை கூகுள், பேஸ்புக் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள நிலையில், டிவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் இன்னும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஏன்
மக்களின் தனிமனித உரிமைக்கு எதிராக இருப்பதாக கூறி இதை டிவிட்டர், வாட்ஸ் ஆப் ஏற்கவில்லை. இதனால்தான் டிவிட்டர், வாட்ஸ் ஆப் தடை பெற்றுவிடுமோ என்று நேற்று இணையத்தில் நெட்டிசன்கள் கவலைப்பட காரணம். கொரோனாவை பற்றி கூட பேசாமல், டிவிட்டர் தடை குறித்துதான் நேற்று பலரும் விவாதம் செய்தனர். முக்கியமாக டிவிட்டருக்கும் - மத்திய அரசுக்கும் தற்போது மோதல் வேறு சென்று கொண்டு இருக்கிறது.
மோதல்
டூல்கிட் தொடர்பான சர்ச்சையில் மேலும் 5 பாஜக தலைவர்களின் டிவிட்களில் டிவிட்டர் நிறுவனம் "Manipulated" டேக் என்ற முத்திரையை குத்தியுள்ளது. அதாவது இவர்கள் செய்த டிவிட்கள் தவறான தகவல்களை, செய்திகளை, வழிகாட்டுதல்களை கொண்டு இருப்பதாக டிவிட்டர் கூறியுள்ளது. மத்திய அரசு இதை நீக்க சொல்லியும் நீக்கவில்லை, இதற்காக டெல்லி டிவிட்டர் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. ஆனால் இன்னும் டிவிட்டர் மத்திய அரசுக்கு அடிபணியவில்லை.
சிக்கல்
இந்த மோதல் காரணமாக டிவிட்டர் கண்டிப்பாக தடை பெற்றுவிடுமோ என்ற அச்சம் உள்ளது. இதனால்தான் நெட்டிசன்கள் நேற்று டிவிட்டரில் குட் பை மெசேஜ்களை அனுப்பினார்கள். இன்னும் பலர், நாளை டிவிட்டர் இருக்குமா என்று தெரியாது, இப்போதே நம்பர் கொடுக்க விரும்பும் நபர்கள் கொடுக்கலாம் என்று கல்லூரி இறுதிநாள் போல டிவிட் செய்தனர்.
இனி என்ன நடக்கும்
ஆனால் நேற்றோடு அவகாசம் முடிந்த நிலையில் இதுவரை டிவிட்டர், வாட்ஸ் ஆப் தடை செய்யப்படவில்லை. சட்டத்திற்கு எதிராக வாட்ஸ் ஆப் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளது. இன்னொரு பக்கம் டிவிட்டர் நிறுவனம் இதில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் உறுதியாக உள்ளது. கொரோனா காலம் என்பதால் மக்கள் டிவிட்டரில்தான் உதவி கேட்கிறார்கள். டிவிட்டர் மூலமே செய்திகள் வேகமாக பரவுகின்றன.
முடியாது
மக்கள் எஸ்ஓஎஸ் மெசேஜ்களை டிவிட்டர், வாட்ஸ் ஆப் மூலமே அனுப்புகிறார்கள். பாஜகவிற்கும் அரசியல் ரீதியான பிரச்சாரத்தில் டிவிட்டர், வாட்ஸ் ஆப், பெரிய பலமாக உள்ளது. அப்படிப்பட்ட டிவிட்டரை தடை செய்தால் அது மத்திய அரசுக்குத்தான் சிக்கல் ஆகும்.
அடுத்து என்ன?
இதனால் இந்த விதிகள் தொடர்பாக டிவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிடமும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்றுர் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டிவிட்டர் போன்ற அமெரிக்க ஊடகத்தை அவ்வளவு எளிதில் தடை செய்து விடவும் முடியாது. இதனால் இந்த சமூக வலைத்தளங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை புதிய விதிகளை பின்பற்ற வைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறித்து.