டுவிட்டரில் மீண்டும் தி.மு.க.வை சீண்டி.. நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட மார்க்கண்டேய கட்ஜு!
சென்னை: தமிழகம் தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த மார்க்கண்டேய கட்ஜு மீண்டும் திமுக தொடர்பாக கருத்து தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.
சென்னை ஹைகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியும், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு சர்ச்சைக்கு பெயர் போனவர்.
உண்மையான 'பாசிஸ்ட்' மம்தா தான்.. அவரிடம் தலைமை பண்பு இல்லை.. விளாசி தள்ளும் மார்க்கண்டேய கட்ஜு!
சர்ச்சைக்கு பெயர் போன கட்ஜு
இந்தியாவில் நடக்கும் பிரச்சினைகள், சம்பவங்கள் குறித்து அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக தமிழகம் தொடர்பான கருத்துகளில் அடிக்கடி கருத்துக்கள் கூறுவார். ஜெயலலிதா இறந்த சம்பவம், ஜல்லிக்கட்டு பிரச்சனை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவை குறித்து பதிவிட்டார் கட்ஜு.
நெட்டிசன்கள் பதிலடி
தற்போது தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து, இது தொடர்பாக கட்ஜு பதிவிட்ட கருத்துக்கு விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன. ''வறுக்கும் வாணலியில் இருந்து நெருப்பிற்கு தமிழகம் செல்கிறது ஹரி ஓம் ''என்று கட்ஜூ ஏற்கனவே வெளியிட்ட பதிவுக்கு நெட்டிசன்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
சொத்து விவரம் குறித்து கேள்வி
இந்த நிலையில் மீண்டும் திமுக தொடர்பாக பதிவிட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டி வருகிறார் கட்ஜூ. ''திமுக, கருணாநிதி அரசியலில் நுழைந்ததிலிருந்து, அவரின் இறப்பு வரையிலான சொத்து விவரங்களையும், அவரின் மனைவிகள், குழந்தைகள், பேரக்குழந்தைகள் (அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, மாறன்கள் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்கள்) ஆகியோரின் அனைத்து சொத்து விவரங்களையும் வெளியிடவேண்டும்'' என்று மார்க்கண்டேய கட்ஜு டுவிட்டரில் கூறி இருக்கிறார்.
நெட்டிசன்கள் கேள்வி
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏன் இவர் திடீரென்று அவர்களின் சொத்து கணக்கை கேட்கிறார்? என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டுளளார். ஜி அப்படியே அமித்ஷா அண்ட் மோடி கிட்ட கேட்டு சொல்றிங்களா? என்று வேறு ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். நீங்கள் உண்மையான நீதிமான் என்றால் மற்றவர்களையும் கேள்வி கேட்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கட்ஜூடம் கேட்டு வருகின்றனர்.