புயல் வர போகுது.. கூடவே மழையும்.. 4 மாவட்டங்களில் செம்ம்ம்ம மழை இருக்காம்.. ஹேப்பி நியூஸ்!
வடக்கு அந்தமான் கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: வரும் அக்டோபர் 14ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.. வடக்கு அந்தமான் கடலில் இந்த புயல் சின்னம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.. அதேசமயம், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்றும், குறிப்பாக 4 மாவட்டங்களில் கனத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நேற்று அளித்த பேட்டியில், அந்தமான் கடல் பகுதியில் நாளை (இன்று) ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 10ம் தேதி வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்றும் கூறியிருந்தார்.
மேலும், மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், சென்னை வானிலை மையம் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மத்திய மற்றும் தென்கிழக்கு, கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதையொட்டி 11 மாவட்டங்களில் மழை பெய்யும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கன மழையும், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
அந்தமான் கடற்பகுதியில் வருகிற 14-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதியில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன.. தற்போது, தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், அந்தந்த மாவட்ட மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.