புதிய காற்றழுத்த தாழ்வு 12 மணிநேரத்தில் உருவாகும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: வங்கக்கடலில் அந்தமான் பகுதிக்கு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு மையம் இன்னும் 12 மணி நேரத்தில் தோன்றும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்ககடலில் கடந்த வாரம் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி புதன்கிழமையன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி கரையை கடந்தது. இதன் காரணமாக கடந்த சனிக்கிழமை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடாமல் கொட்டிய கனமழையால் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
தலைநகரம் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஒரு வாரமாக பல ஆயிரம் பேர் இருளில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

பெருக்கெடுத்த வெள்ளம்
கன்னியாகுமரியில் 3வது நாளாக இன்றும் மழை பெய்வதால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அணைகள் நிரம்பி வழிவதால் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. குளங்கள் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இதனிடையே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக இருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

5 நாட்களுக்கு கனமழை
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். மேலும் இதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

எங்கெங்கு மழை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.

சென்னையில் மிதமான மழை
கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

நீலகிரியில் அதிகன மழை
இன்று முதல் நான்கு நாட்களுக்கு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், குமரி கடல், மன்னார் வளைகுடா, கேரள கடலோரப்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications