மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.. முதலீட்டை முன்கூட்டியே எடுக்க இத்தனை கட்டுப்பாடா? முழு விபரம்
சென்னை: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீட்டு தொகையை முன் கூட்டியே திரும்பி எடுப்பதற்கு அஞ்சல் துறைபுதிய கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. அது என்ன கட்டுப்பாடுகள்? முன் கூட்டியே முதலீட்டை எடுப்பதால் எவ்வளவு தொகை பிடித்த செய்யப்படும் என்ற விபரங்களை வழங்கி உள்ளார் பொருளாதார ஆலோசகர் கே.ராஜேஷ்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது, "SCSS எனப்படும் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் குறித்து கடந்த நவம்பர் 7 ஆம் தேதி அன்று அஞ்சல் துறை அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திலிருந்து (SCSS) உங்களது முதலீட்டை முன்கூட்டியே எடுப்பதற்கு (Premature Withdrawal) அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

அதன் விவரங்கள் கீழே:
1. உங்களது முதலீட்டை ஒரு வருடத்திற்கு முன்னமே எடுக்க விரும்பினால், பெனால்டி தொகையாக, உங்களது முதலீட்டில் 1% வசூலிக்கப்படும். அதாவது, நீங்கள் ₹1,00,000 முதலீடு செய்து, ஒரு வருடம் முடியும் முன்னமே உங்களது முதலீட்டை முன்கூட்டியே திரும்பப் பெற விரும்பினால், அதற்கு கட்டணமாக ₹1,000 பிடித்துக்கொண்டு, உங்களுக்கு ₹99,000 திரும்ப வழங்கப்படும்.
2. ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கான வைப்புத் தொகையை, டெபாசிட் செய்த தேதியில் இருந்து ஆறு மாதம் முடிந்த பிறகு மற்றும் ஒரு வருட முடிவிற்குள் நீங்கள் முன்கூட்டியே திரும்பப் பெற்றால், டெபாசிட் காலத்திற்கான வட்டி, சாதாரண அஞ்சல் சேமிப்பு கணக்கிற்கான வட்டியாக மாற்றம் செய்யப்படும்.
3. ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கான வைப்புத் தொகையை, டெபாசிட் செய்த தேதியிலிருந்து ஒரு வருடம் முடிந்த பின்னர் நீங்கள் முன்கூட்டியே திரும்பப் பெற்றால், டெபாசிட் காலத்திற்கான வட்டி, முதலீட்டு வட்டியில் இலிருந்து 2% கழித்துக் கொள்ளப்பட்டு, எவ்வளவு மாதங்கள் முதலீடு செய்தீர்களோ, அந்த மாதங்களுக்கு மட்டும் வட்டி கணக்கிட்டு உங்களுக்கு தரப்படும்.
4. ஐந்து வருட முதலீட்டுகளில், நீங்கள் நான்கு வருடம் முடிந்த பின்னர் முன்கூட்டியே திரும்பப் பெற்றால், டெபாசிட் காலத்திற்கான வட்டி, சாதாரண அஞ்சல் சேமிப்பு கணக்கிற்கான வட்டியாக மாற்றப்படும்.
5. எந்தவொரு முதலீட்டையும், ஆறு மாதம் முடியும் முன்னர் உங்களால் முன்கூட்டியே திரும்பப் பெற முடியாது." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications