Neyveli PMK Protest: என்.எல்.சி.க்கு எதிராக பாமக போராட்டம் - நெய்வேலி விரைகிறார் டிஜிபி சங்கர் ஜிவால்!
சென்னை: என்.எல்.சி. நிலம் கையகப்படுத்துதலை கண்டித்து பாமக நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் நெய்வேலி விரைகிறார்.
நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றாலும் மேற்கொண்டு எந்த அசம்பாவிதங்களும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் சங்கர் ஜிவால் மிக உறுதியாக உள்ளார். இதனிடையே அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம் சங்கர் ஜிவால் பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறையினர் சும்மா இருந்திருந்தால் பாமகவினர் கோபம் அடைந்திருக்கமாட்டார்கள் என்பதும் முழு நிகழ்வுக்கும் காவல்துறையே காரணம் என்பதும் அன்புமணி முன் வைக்கும் குற்றச்சாட்டாகும். தற்போது கடலூர் மாவட்டத்தில் 10 மாவட்டங்களில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே இன்றோடு பாமக போராட்டத்தை முடித்துக்கொள்ளுமா அல்லது மீண்டும் நாளை தொடர்ந்து நடத்துமா என்ற தகவல் இல்லை. என்.எல்.சி.யை தமிழ்நாட்டிலிருந்து அகற்றாமல் ஓயமாட்டேன் என அன்புமணி ராமதாஸ் சூளுரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூருக்கு ஒரு நியாயம், கடலூருக்கு ஒரு நியாயமா? என்று ஆதங்கத்தை கொட்டியுள்ள அன்புமணி, கடலூரில் மக்கள் இல்லையா, வாக்காளர்கள் இல்லையா, பெண்கள் இல்லையா, விவசாயிகள் இல்லையா? தஞ்சாவூரில் மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்கப் போறாங்கனு சொன்ன உடனே கொந்தளிப்பு வருது, எல்லா விவசாய சங்கங்களும் வருது, எல்லா கட்சிகளும் வருது, கடலூருக்கு மட்டும் ஏன் வரவில்லை கொதித்தெழுந்தார்.

இதனிடையே தூத்துக்குடி நிகழ்வு போன்று எதுவும் நடந்துவிடாமல் மிகவும் ஜாக்கிரதையாக என்.எல்.சி. எதிர்ப்பு போராட்டத்தை கையாளச் சொல்லி முதல்வர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பதால் காவல்துறை சற்று நிதானமாக செயல்படுகிறது.












Click it and Unblock the Notifications