அதிமுக தேர்தல்: ஓபிஎஸ் இபிஎஸ் மீண்டும் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு; வேட்புமனுக்கள் ஏற்பு
சென்னை : அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில் அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக உறுப்பினர் ஓம்பொடி பிரசாத்சிங் என்பவர் மட்டும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விருப்ப மனு கேட்ட நிலையில் விதிகளை பின்பற்றவில்லை என அவர் வெளியேற்றப்பட்டிருந்தார்.

அதிமுக தேர்தல்
அதிமுகவில் சமீப காலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கட்சியின் செயற்குழு கூடி கட்சி விதிகளில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த விதியில் கட்சித் தலைமையை ஏற்கும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஒரே சமயத்தில் போட்டியிடுவார்கள் என்றும் அவர்களை கட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்வர் எனவும் திருத்தப்பட்டது. அதிமுகவின் உட்கட்சித் தேர்தல் டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் என்றும், வேட்பு மனுதாக்கல் 3, 4 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு
இந்நிலையில் அதிமுகவில் நடைபெறும் தேர்தலில் முறைகேடு உள்ளது என்றும் இந்தத் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக முன்னாள் எம்பியும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.சி.பழனிசாமி வழக்குத் தொடர்ந்தார். மேலும் உரிய விதிகளை பின்பற்றவில்லை என்றும், வாக்காளர் பட்டியலும் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் தனது மனுவில் குற்றச்சாட்டு வைத்திருந்தார் கே.சி.பழனிசாமி. ஆனால் தேர்தலுக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஒருவேளை தேர்தலில் முறைகேடு நடந்தது தெரியவந்தால் முடிவுகளுக்கு தடைவிதிக்க நேரிடும் எனக் கூறிய உயர்நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் மனுவுக்கு ஓபிஎஸ், இபிஎஸ், பொன்னையன் பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது.

அதிமுக தொண்டர் மீது தாக்குதல்
இந்நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ்சை எதிர்த்து யாரும் விருப்ப மனு வாங்க வரவில்லை. எம்ஜிஆர் காலத்து தொண்டரான சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ஓம்பொடி பிரசாத் சிங் என்பவர் மட்டும் விருப்ப மனு வாங்க வந்தார். ஆனால் அவரிடம் உரிய தகுதி இல்லை என்றும் விதிகளை பின்பற்றவில்லை என்றும் கூறி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க முற்பட்டபோது தாக்கப்பட்டார். பின்னர் போலீசார் அவரை மீட்டு அழைத்துச் சென்றனர். பின்னர் ஓம்பொடி பிரசாத் சிங் அளித்த புகாரில் அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், மனோகரன் உள்ளிட்ட 12 பேர் மீது 143, 148, 341, 323, 427 5 IPC பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு போட்டியில்லை
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தங்கள் மனுக்களை தேர்தல் நடத்தும் ஆணையர்களான சி.பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமனிடம் சமர்ப்பித்தனர். கட்சி விதிகளின்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை 15 பேர் முன்மொழிய வேண்டும், 15 பேர் வழிமொழிய வேண்டும். ஓபிஎஸ் இபிஎஸ் இருவருக்கும் அதிமுகவின் நிர்வாகிகள், மூத்த உறுப்பினர்கள் அவர்களின் பெயர்களை பரிந்துரை செய்தனர். இவர்களின் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வந்தது. தற்போது அவர்கள் மனு ஏற்கப்பட்டுள்ளதாக அதிமுக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அவர்கள் தங்களது மனுவை வாபஸ் பெறவேண்டும் என்றால் நாளை வரை அவகாம் உள்ளது. அப்படி வாபஸ் பெறவில்லை என்றால் தலைமை பொறுப்புகளுக்கு அவர்களை மட்டுமே தேர்ந்தேடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.












Click it and Unblock the Notifications