குட் நியூஸ்: ஐஐடியில் படிக்க ஆசையா? கட்டணம் பற்றி கவலை வேண்டாம் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
சென்னை: ஐஐடி, ஐஐஎம் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்காக அரசாணை வெளியாகியுள்ளது.
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின் படிப்புச் செலவிற்கான முழுத் தொகையினையும் வழங்குவதற்காக வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் வகுத்து அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு, மாணவர்கள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை அரசு பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டிய அவசியம் என ஆணையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கனமழையால் தமிழகத்தில் 9 பேர் உயிரிழப்பு! 4,597 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பு! தமிழக அரசு தகவல்
விண்ணப்ப முறை
உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப்பெற்ற மாணவர்கள், அந்நிறுவனங்களில் சேர்வதற்காக கலந்து கொண்ட நுழைவுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல், சேர்க்கை ஆணை, கல்வி நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்படும் உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) மற்றும் அக்கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண விவரங்களுடன், மாவட்ட ஆட்சித்தலைவரின் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
பரிந்துரை
மாவட்ட ஆட்சித்தலைவர், விண்ணப்பித்த மாணவர்களின் அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்த்து, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைபெற்ற மாணவர்களின் படிப்பிற்காக ஆகும் மொத்த செலவின விவரங்களுடன், தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்திற்கு பரிந்துரை செய்து கருத்துரு அனுப்பவேண்டும்.
செலவீன கணக்கீடு
சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெறப்படும் பரிந்துரையினை ஆராய்ந்து, உயர்கல்விக்காக ஆகும் மொத்த செலவினத்தினை கணக்கீடு செய்து உரிய நிதி ஒதுக்கீடு ஆணை பிறப்பிக்கக்கோரி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அரசுக்கு கருத்துரு அனுப்பவேண்டும்.
சாதி பாகுபாடு இன்றி
அரசுபள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலுவதை ஊக்குவிப்பதற்காக சாதிப் பாகுபாடின்றியும், ஆண்டு வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், அம்மாணவர்களின் விவரங்கள், மாவட்ட இயக்ககத்தின் கருத்துருவினை ஆய்வு செய்து நன்றாக பரிசீலித்து, முதலாம் ஆண்டிலேயே, நான்கு ஆண்டுகளுக்கான செலவின தொகையை பார்த்து, ஒவ்வொரு ஆண்டுக்கும் ஆணையரே அம்மாணவருக்கு செலவின தொகைக்கு நிர்வாக ஒப்புதலினை அளித்தும், முதலாம் ஆண்டிற்கான செலவின ஒப்பளிப்பு செய்தும் அரசால் ஆணை வெளியிடப்படும்.
இணையதளம்
அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கருத்துருவினை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்று தொழில்நுட்ப கல்வி ஆணையரே அம்மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டுக்குமான செலவின தொகை வழங்கலாம். இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காகவும், சரிபார்த்தலை விரைவாக முடிப்பதற்கும், வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தவும் ஒரு இணைய தளம் (Online Portal) தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் ஏற்படுத்தப்படும்.
ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
இத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் பொழுது பெற்று விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்களை பெற்று ஆய்வு செய்து பரிந்துரையுடன் கருத்துருவினை தொழில்நுட்பக் கல்வி ஆணையருக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தேவையான விண்ணப்பங்கள்
1. மாணவர்கள் உயர்கல்வி நிறுவனத்தில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண உதவித் தொகையினை பெறுவதற்கான சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவருக்கு முகவரியிடப்பட்ட விண்ணப்பம்.
2. 6-ஆம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றதற்கான அப்பள்ளி தலைமை ஆசிரியரால் வழங்கப்படும். சான்றிதழ்.
3. தமிழ் நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடர் சான்றிதழ் (Nativity Certificate)
4. உயர்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக கலந்து கொண்ட நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல்,
5. உயர்கல்வி நிறுவனத்தில் சேர்ந்ததற்கான சேர்க்கை ஆணை
6. சேர்க்கை பெற்ற உயர்கல்வி நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்படும் Bonafide சான்றிதழ்.
7. சேர்க்கை பெற்ற உயர்கல்வி நிறுவனத்தில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண விபரங்கள்.