"தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது" தமிழிசை செளந்தரராஜன்!
சென்னை: தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநராக 4வது ஆண்டு பணியை தொடங்கியுள்ள தமிழிசை செளந்தரராஜன், 3ம் ஆண்டு பயணம் குறித்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், எனது அப்பா ஒரு தேசிய கட்சித் தலைவர் , அதற்கு நேர்மாறான தேசியக் கட்சியில் நான் தலைவராக இருந்தது தமிழகத்திற்கு செய்த மிகப்பெரும் கடமையாக நினைக்கிறேன் என்று தெரிவித்தார்.

என் பணியை செய்வேன்
தொடர்ந்து, தெலங்கானாவில் எந்தப் பணிகளிலும் நான் இடையூறு செய்ததில்லை. ஆனால் எனது பணிகள் இடையூறாக இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். குடியரசுத் தினத்தன்று என்னை கொடி ஏற்றவிடவில்லை. அதேபோல் ஆளுநர் உரையாற்றவில்லை. இது எப்படி இருந்தாலும் நான் இடையூறும் செய்ததில்லை, இடைவெளியும் விட்டதில்லை.

தமிழ்நாடு மீது அன்பு
தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநரான தமிழிசை எப்போதும் தமிழ்நாட்டில் இருக்கிறார் என்று பார்க்கப்படுகிறது. தெலங்கானா சென்றால் புதுச்சேரி செல்லவில்லையா என்றும், புதுச்சேரியில் இருந்தால் தெலங்கானா செல்லவில்லையா என்று கேட்கிறார்கள். அப்படியல்ல, தெலங்கானா மற்றும் புதுச்சேரியில் முழுமையாக பணியாற்றுகிறேன். தமிழகம் மீது முழுமையான அன்புடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

விமர்சனங்கள்
அதேபோல் மருத்துவராக இருந்து தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்ற போது என் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் எனக்கு கொடுத்த பொறுப்பை முழுமையாக மக்களுக்காக செய்தேன். இன்று ஆளுநராக ஆட்சியாளர்களுக்கு இடையூறு செய்கிறேன் என்று கூறுகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை சந்தித்தால் அங்கு செல்ல வேண்டியது அனைவரின் கடமை.

தனி விமானம்
அதேபோல் மூன்று மாநிலங்களுக்கு அடிக்கடி தொடர்ந்து பயணத்தாலும், இதுவரை தனி விமானம் எடுத்ததில்லை. அதேபோல் தெலங்கானா ராஜ் பவனுக்கு மாதமாதம் எனக்கு சாப்பாடு கட்டணத்தை கட்டிவிடுகிறேன். எனது அப்பாவை தெலங்கானாவில் வைத்து பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அவர் எப்போது வேண்டுமானாலும் தமிழ்நாடு வருவார். என்னால் அவரை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.

தமிழக அரசியல்
தொடர்ந்து, தமிழ்நாட்டில் தான் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், காலையும் பதிப்பேன். என்னை யாரும் தடுக்க முடியாது. ஆளுநர் கருத்து சொல்லக்கூடாது என்று எந்த அரசியலமைப்பு சட்டமும் சொல்லவில்லை. தமிழகத்தில் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications