கண்ணுக்கு எட்டிய தூரம் எதிர்தரப்பை காணவில்லை..ரொம்ப அடக்கமாக இருக்கிறார்கள்..சொல்வது கே.எஸ்.அழகிரி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எதிர்தரப்பினரை கண்ணுக்கு எட்டிய தூரம் காணப்படவில்லை என கே.எஸ்.அழகிரி கூறினார்.
சென்னை: ஈரோட்டில் எங்களுடைய தோழமை கட்சிகளின் தோழர்கள் பம்பரமாக சுழன்று அங்கே வேலை செய்கிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். ஈரோட்டில் தேடி, தேடி பார்க்கிறோம். எதிர்தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் காணப்படவே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடக்கமே தெரியாத சிலர் ரொம்ப அடக்கமாக பேசுகிறார்கள் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறங்குகிறார். விசிக,கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் ஆதரவுடன் பிரச்சாரம் செய்து வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனும் நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறி ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை கொடுத்து வலுப்படுத்தியுள்ளார்.
தேமுதிக தனியாக வேட்பாளரை களமிறக்கியுள்ளது. அதேபோல நாம்தமிழர் கட்சியும் தனியாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது. பலமுனை போட்டி நிலவும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணியாகவும் ஓ.பன்னீர் செல்வம் அணி தனியாகவும் போட்டியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர். 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்தாலும் வேட்பாளர் யார் என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளதால் அதற்குள் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் உள்ளனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. தொகுதியை எப்படியும் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தையும் துவக்கி விட்டது திமுக. வலிமை வாய்ந்த தேர்தல் பணிக்குழுவையும் அறிவித்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக திமுகவினரும் காங்கிரஸ் கட்சி தலைவர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. கொடி ஏற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் கே.எஸ். அழகிரி பேசினார். ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் எங்களுடைய கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்து இருக்கிறது. எங்களுடைய மேடைக்கு கமல்ஹாசன் வந்திருக்கிறார். அவரை வரவேற்கிறோம். அவருடைய இயக்கத்தின் ஆதரவு எங்களுக்கு மகத்தான வெற்றியை தரும்.
ஒத்த கருத்துடையவர்கள் பல்வேறு மேடைகளில் இருந்தாலும், அவர்களை எல்லாம், ஒரே மேடைக்கு அழைத்து வந்து ஒன்றுபடுத்த வேண்டும் என்று தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து, தமிழகத்தில் அந்த பணிகளை செய்திருக்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் களத்தில் நாங்கள் பணியாற்றுகிறோம். மகத்தான வெற்றி எங்களுக்கு இருக்கிறது.
ஈரோட்டில் எங்களுடைய தோழமை கட்சிகளின் தோழர்கள் பம்பரமாக சுழன்று அங்கே வேலை செய்கிறார்கள். ஆனால் ஈரோட்டில் தேடி, தேடி பார்க்கிறோம். எதிர்தரப்பு கண்ணுக்கு எட்டிய தூரம் காணப்படவே இல்லை. எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அடக்கமே தெரியாத சிலர் ரொம்ப அடக்கமாக பேசுகிறார்கள். இந்த தேர்தல் அவர்களுக்கு ரொம்ப படிப்பினையைத் தந்திருக்கிறது என்று கருதுகிறேன். நாங்கள் களத்தில் மகத்தான வெற்றியை பெறுவோம். எங்கள் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சிறந்தவர். அவர்தான் வெற்றி பெறுவார் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.