இந்த ஃபோட்டோவை பாருங்க! "ஒற்றை" தலைமையாக உருவெடுத்த எடப்பாடி.. அத்தனை சீனியர்களும் அவருக்கு கீழேதான்
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று எடப்பாடி பழனிசாமி சென்ற நிலையில், இன்று அங்கு நடந்த ஒரு சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜெயலலிதா இருந்த வரை அதிமுகவில் என்ன நடக்கிறது என்றே யாருக்கும் தெரியாது. தலைமை பிறப்பிக்கும் உத்தரவை மூத்த தலைவர்கள் தொடங்கி அனைவரும் அப்படியே ஏற்றுக்கொள்வார்கள்..
ஆனால் ஜெயலலிதா உயிரிழந்தது முதலே நிலைமை தலைகீழ்! அங்கு உட்கட்சியில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களும் மாநிலம் முழுக்க பேசுபொருள் ஆகி வருகிறது.

அதிமுக
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இரட்டை தலைமைக் கீழ் கட்சி சென்றது. அதுவும் சும்மா வந்துவிடவில்லை. அதுவே ஒரு தனிக்கதை. கட்சி ஓபிஎஸ் தலைமை கீழும் ஆட்சி எடப்பாடி தலைமையில் இயங்கும் என்பது போல இருவரும் பிரித்துக் கொண்டனர். இருப்பினும், இரு தலைவர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவுவதாகவும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் தொடர்ந்து தகவல் வெளியானது.

ஒற்றை தலைமை
மக்களவை தேர்தல் தொடங்கி சட்டசபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் இந்த இரட்டை தலைமை அதிமுகவுக்கு வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறி விஷயத்தை பூதாகரமாக்கினார் ஜெயக்குமார்.

எடப்பாடி பழனிசாமி
தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கிலும் சென்னை ஐகோர்ட் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் எடப்பாடி செம குஷியில் உள்ளார். கட்சிக்குக் கூட்டுத் தலைமையே தேவை என்று ஓபிஎஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.

கட்சி தலைமையகம்
இருப்பினும், பெரும்பாலான நிர்வாகிகள் தனக்கு ஆதரவாக இருப்பதால் இதை எடப்பாடி முற்றாக நிராகரிக்கிறார். இந்தச் சூழலில் தான் எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று இருந்தார். முன்னதாக, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற போது, ஓபிஎஸ் அங்குச் செல்லாமல் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று இருந்தார். அப்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டு இருந்தது.

உற்சாக வரவேற்பு
அதைத் தொடர்ந்து கட்சியில் இருக்கும் ஆவணங்கள் மற்றும் முக்கிய பொருட்களை ஓபிஎஸ் தரப்பு கொள்ளை அடித்துச் சென்றதாக ஓபிஎஸ் தரப்பு மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அந்தச் சம்பவம் நடந்து பல வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி முதல்முறையாகக் கட்சி தலைமையகத்திற்குச் சென்றார். அங்கு அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அத்தனை சீனியர் லீடர்களும்
அங்கு நடந்த ஒரு சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு முன்பு இரட்டை தலைமை இருந்த வரை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் இருவரும் மேடை ஏறுவார்கள். அவர்கள் மட்டுமின்றி கட்சியின் மூத்த தலைவர்களும் இருவரின் அருகில் தான் அமர்ந்து இருப்பார்கள். ஆனால், இன்றைய நிகழ்ச்சியில் அனைவருக்கும் ஷாக். செங்கோட்டையன் தொடங்கி ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி என யாருக்கும் எடப்பாடி அருகே இடமில்லை

செட்அப்
எடப்பாடி மட்டுமே தனியாக இருக்க அவருக்கு எதிராகத் தான் இந்த தலைவர்களுக்கு இடம் வழங்கப்பட்டு இருந்தது. அனைவருக்கும் ஞாபகம் இருக்கலாம், பொதுவாக ஜெயலலிதா காலத்தில் தான் இதுபோன்ற செட்அப்கள் இருக்கும். இதைப் பார்த்த நிர்வாகிகள் சிலர், ஒற்றை தலைமையில் தனக்குக் கீழே கட்சி வந்துவிட்டதைக் காட்டவே எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஜெயலலிதா பாணி செட்அப்பை கையில் எடுத்துள்ளதாகக் கூறுகின்றனர்.

அதிரடி "சம்பவங்கள்"
ஒற்றை தலைமை தான் கட்சிக்கு ஒரே தீர்வு என்று சொல்லும் எடப்பாடி தனது கட்டுப்பாட்டில் தான் கட்சி உள்ளது என்பதைக் காட்டும் வகையிலேயே நடந்து கொண்டு வருகிறார். இப்போது அவர் அதிமுக தலைமையகம் சென்றுள்ள நிலையில், வரும் நாட்களிலும் அவர் பல அதிரடி "சம்பவங்களை" செய்வார் என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications