ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் எந்த தீர்மானமும் வரக்கூடாது - ஓபிஎஸ் தரப்பு வாதம்.. ஒரே பாயிண்ட்!
சென்னை : ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் பொதுக்குழுவில் எந்த தீர்மானத்தையும் முன் வைக்க இயலாது என்றும் ஒருங்கிணைப்பாளர்களை நீக்க கட்சி விதியில் இடமில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் வாதத்தை எடுத்து வைத்துள்ளது.
சென்னை வானகரத்தில் நாளை நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையின்போது ஒருங்கிணைபாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு 23 தீர்மானங்களை தாண்டி எந்த தீர்மானத்தையும் கொண்டு வரக் கூடாது என வாதம் செய்து வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்போ, நாளை என்ன நடக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

ஓ.பி.எஸ் தரப்பு வாதம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த டிசம்பரில் உட்கட்சித் தேர்தல் நடத்தி ஒருமனதாக ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளது. ஒருங்கிணைப்பாளர்களுக்கு 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது. இந்நிலையில், அந்தப் பதவிகளை பொதுக்குழுவால் நீக்க முடியாது என்றார்.

23 தீர்மானங்கள்
மேலும், 23 வரைவு தீமானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இமெயில் வந்தது. கட்சி அலுவலகத்தில் இருந்து வந்த 23 வரைவு தீர்மானங்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் ஒப்புதல் கொடுத்துள்ளார். 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள 23 வரைவு தீர்மானங்களின் நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் ஒப்புதல் அளித்துள்ள வரைவு தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானம் இல்லை. இந்த 23 தீர்மானங்களைத் தவிர புதிதாக எதையும் சேர்க்கக்கூடாது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

எடப்பாடி வழக்கறிஞர் பதில்
இதில் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, இது நடக்கும் இது நடக்காது என்று சொல்லமுடியாது. பொதுக்குழுவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம், முடிவெடுக்கலாம். எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும். பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம் கொண்டது. கொள்கையை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. செயல்திட்டங்கள் இல்லாமல், அஜெண்டா இல்லாமல் ஏற்கனவே பொதுக்குழுக்கள் நடந்துள்ளது. பொதுக்குழு உறுப்பினர்கள் எந்த விவகாரம் தொடர்பாகவும் குரல் எழுப்பலாம் எனப் பதில் அளித்தது.
Recommended Video

ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல்
அதற்கு ஓ.பி.எஸ் தரப்பு, "ஒரு விவகாரத்தை முன் மொழிவது என்பது வேறு, விவகாரத்தை எழுப்புவது என்பது வேறு. பொதுக்குழுதான் அனைத்தையும் முடிவு செய்யும் என்பது சரியானதுதான். ஆனால், ஒருங்கிணைப்பாளருக்கு தெரியாமல் பொதுக்குழுவில் எந்த தீர்மானத்தையும் முன் வைக்க இயலாது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை நீக்க கட்சி விதியில் இடமில்லை. ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த தீர்மானங்களை தவிர மற்ற தீர்மானங்களை நாளை கொண்டு வரக்கூடாது" என்ற வாதத்தை முன்வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications