ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் சஸ்பெண்ட் நடைமுறை நீக்கம்.. அரசாணை வெளியீடு
சென்னை: ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறை நீக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யும் நடைமுறையை நீக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர் ஆசிரியர் பணி சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து, 07.09.2021 அன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும் என்ற அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார். இந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளர் மேரியின் நேர்மைக்கு கவுரவம்.. தலைமைச் செயலாளர் கைப்பட எழுதிய பாராட்டுக் கடிதம்..!
நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டு
மேலும், தவறு செய்யும் அரசு ஊழியர்களைத் தடுக்கவும் அவர்களைச் சீர்படுத்தவும் அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒழுங்கு நடவடிக்கையை இறுதி செய்தவுடன், நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை விதிக்கப்படுகிறது. சில சமயங்களில், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாள் வரை ஒழுங்கு நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டு, இழுத்தடிக்கப்படுகின்றன, மேலும் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை இறுதி செய்வதில் இத்தகைய தாமதத்தைத் தவிர்க்க, தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
நிலைமை
தகுதிவாய்ந்த அதிகாரி தனிப்பட்ட முறையில் நிலைமையை மதிப்பிட்டு, அரசு ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் பணிநீக்கம் அல்லது நீக்கம் செய்யப்படுவதற்கு உத்தரவாதமளிக்கும் அளவுக்கு தீவிரமானவை என்பதையும், முதன்மையான பார்வையில் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன",என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அரசு ஊழியர்களுக்கான பல நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்த முதல்வர், இதன் மூலம் 60 லட்சம் ஊழியர்கள் பலனடைவார்கள் என்றார்.
சத்துணவு உதவியாளர்கள்
அது போல் சத்துணவு சமையலர்கள் மற்றும் சத்துணவு உதவியாளர்கள் ஆகியோரது ஓய்வூதியம் பெறக் கூடிய வயது 58லிருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் சஸ்பெண்ட் நடைமுறை நீக்கப்படுவதையும் முதல்வர் அறிவித்துள்ளார்.