70% கூடுதலாக கொட்டிய வடகிழக்குப் பருவமழை - விடாமல் வெளுக்கும் மழையால் தமிழகம் தத்தளிப்பு
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தற்போது வரை 70 சதவிகிதம் கூடுதலாகவும் சென்னையில் 67 சதவிகிதம் கூடுதலாகவும் பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை மைய தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகம் முழுவதுமே அதிகனமழை பெய்து வருவதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவை விட 70 சதவிகிதம் கூடுதலாகப் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப்பருவமழை காலமாகும். அக்டோபர் 25ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் நிதானமாக மழை பொழிவு இருந்தாலும் நவம்பர் மாதம் முதலே மழையின் வீரியம் அதிகரிக்கத் தொடங்கியது.
நவம்பர் 7ஆம்தேதி சென்னையில் கொட்டித்தீர்த்தது கனமழை. அதே போல திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், கன்னியாகுமரி வரை பருவமழை பல மாவட்டங்களை சூறையாடியது. லட்சக்கணக்கான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்கள் தண்ணீரில் தத்தளிக்கின்றனர். பல ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

ஆறுகளில் வெள்ளம்
அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்படுவதால்
காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி என தமிழகம் முழுவதுமே பல ஆறுகள் உயிர் பெற்று பெருவெள்ளமென ஓடிக்கொண்டிருக்கின்றன. பல லட்சம் கனஅடி நீர் கடலில் கலக்கிறது.

சூறையாடிய மழை
கடந்த சில வாரங்களாகவே கொட்டிய வந்த பலத்த மழை சில தினங்கள் மட்டுமே மழை ஓய்வெடுத்தது. மீண்டும் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பருவமழை காலத்திலேயே அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் 31 செமீ அளவிற்கு மழை பதிவானது. திருச்செந்தூரில் 27 செமீ மழையும், தூத்துக்குடியில் 25 செமீ மழையும் பதிவானது. இதனிடையே இன்னும் இரு தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் முழுவதும் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகனமழை
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதாகவும், அடுத்த சில தினங்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவித்தார். கடலோரோ மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய பாலச்சந்திரன் அதி கனமழைக்கான அலர்ட்டாக இல்லாமல் தொடரும் மழை பாதிப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைக்காக ரெட் அலர்ட் வழங்கப்பட்டிருக்கிறதாக தெரிவித்தார்.

அதிக மழை வெள்ளம்
வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் நேற்று வரை தமிழகம் புதுச்சேரியில் 58 செமீ மழை பெய்துள்ளது. இயல்பாக 34 செமீ பெய்ய வேண்டும். இது 70 சதவிகிதம் அதிகம். சென்னை மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 98 செமீ மழை பெய்துள்ளது. இயல்பாக 59 செமீ மழை பெய்ய வேண்டும். இது 67 சதவிகிதம் அதிகம் கடந்த 3 ஆண்டை பொருத்தவரையில் ஒரு நாளைய சராசரி மழை தமிழகம் புதுவையில் நேற்று தான் அதிகபட்சமாக 4 செமீ மழை பெய்துள்ளதாகவும் கூறினார்.வரும் 29ஆம் தேதி தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற கூடும் என்றும் இதன் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.











Click it and Unblock the Notifications