குட்பை சொன்ன வடகிழக்கு பருவமழை..தமிழ்நாடு, புதுச்சேரியில் இனி குளிர்..நீலகிரியில் உறைபனி வாட்டும்
சென்னை:
வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்றுடன் விலகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வானிலை ஆய்வு மைய நடைமுறைப்படி அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை வடகிழக்கு பருவமழைக் காலமாக கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் 44.3 செமீ மழை கிடைக்கும். கடந்த ஆண்டு 44.5 செமீ பதிவானது. இது வழக்கத்தை விட 1 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது.
வடகிழக்கு பருவமழைக் காலத்தில் 21 மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகமாகவும், 17 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டில் மழையில்லை மாறாக மாலை நேரங்களில் குளிர் காற்று வீசுகிறது. இரவு நேரங்களிலும் அதிகாலை நேரத்திலும் கடுங்குளிர் நிலவுகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி வரை பனிக்காலம் நிலவும். ஆரம்பத்தில் நீர்ப்பனி பொழிவும், அதன் தொடர்ச்சியாக உறைபனியும் அதிகமாக இருக்கும். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான உறைபனி காணப்படும். ஆனால் பருவமழை தாமதமாக தொடங்கியதால் பனிக்காலமும் தாமதமாகவே தொடங்கியது.
தற்போது மழை குறைந்ததால் பனிப்பொழிவு குறைந்து உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 நாட்களாக உறைபனியில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பசும் புற்களின் மீது வெள்ளை போர்வை போர்த்தியது போல பனி உறைந்து போயுள்ளது. ஏரிகளில் புகை மூட்டம் உருவாகி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
இதனிடேயே இன்று முதல் வடகிழக்கு பருவமழை விடை பெற்று விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து இன்றுடன் விலகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
14 முதல் 16ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications