பொன்முடி விசாலாட்சி மட்டுமல்ல.. ஜோடியாக தண்டனைக்குள்ளான அமைச்சர்கள் யார் யார்? இதில் என்ன சிக்கல்?
சென்னை : சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதேபோல் ஜோடியாக தண்டனைக்குள்ளான அமைச்சர்கள் பற்றி இப்போது பார்ப்போம்.
பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையிட்டு மனுவில் நேற்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன், " குற்றவாளிகள் இருவரும் தங்கள் உடல் நலம் சரியில்லை என்று கூறி மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்திருக்கிறார்கள். இருவரும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால், இந்த வழக்கின் குற்றத்தின் தன்மை, இதன் மூலம் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கம், அவர்கள் இருவரின் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் தண்டனை வழங்க முடிவு செய்துள்ளேன்.

அதன்படி பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கிறேன்" என்று கூறினார். அதேநேரம் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக சிறை தண்டனையை மட்டும் 30 நாட்கள் நிறுத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அவர் 30 நாட்களில் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து, தண்டனைக்கு இடைக்கால தடை வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பொன்முடியும்,அவரது மனைவியும் சிறை செல்ல நேரிடும்
சொத்துகுவிப்பு வழக்குகளில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதேபோல் ஜோடியாக தண்டனைக்குள்ளான அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பற்றி இப்போது பார்ப்போம் பொன்முடி விசாலாட்சி தம்பதி மட்டுமல்ல.. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி - அவரது மனைவி சந்திரா; பொன்னுச்சாமி - பிரபாவதி; அ.மா.பரமசிவம் - நல்லம்மாள்; இந்திராகுமாரி - அவரது கணவர் பாபு ஆகியோர் ஜோடிகளாக சிறை தண்டனையை பெற்றுள்ளார்கள்.
இதேபோல் ஊழல் வழக்குகளில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, முன்னாள் எம்.பி. செல்வகணபதி போன்றவர்கள் தங்களின் பதவியை உடனே இழந்தனர். ஆனால் திமுகவில் இப்படி பதவியை இழந்த முதல், அமைச்சர் பொன்முடி தான். திமுகவில் யாருமே இப்படி சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி பதவியை இழந்தது இல்லை. பொன்முடி தான் முதல் முறை.
இதனிடையே செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில்,, கேஎன் நேரு, திண்டுக்கல் ஐ பெரியசாமி கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் மீதும் வழக்குகள் உள்ளது. அதிமுகவிலும் முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் இதேபோல் வழக்குகள் உள்ளது.
இதில் அவர்கள் தப்பிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.. சொத்துக்குவிப்பு வழக்கினை பொறுத்தவரை, வழக்கு போட்டுவிட்டால், வழக்கில் சிக்கியவர் தான், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்க, அவரே சாட்சியங்களையும் ஆவணங்களையும் தயார் செய்ய போராட வேண்டும். அது மட்டுமல்லாமல், அந்த குற்றத்திற்கு உடந்தை என்ற கணக்கில்அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளையும் பாதிக்கும். அப்படி அமைச்சர்கள் பலர் சிக்கி உள்ளனர். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது, நேர்மையாகவும் கவனமாகவும் இருக்காவிட்டால், வரும் காலங்கள் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்எல்ஏக்களுக்கு சிக்கலாகும் என்பதை நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள் உணர்த்துகின்றன.












Click it and Unblock the Notifications