காசு கொடுக்காமல் 5 ஆயிரம் பேரை திரட்டட்டும்.. பிறகு 50 ஆயிரம் பற்றி பேசலாம்.. திமுகவை சீண்டிய சீமான்
சென்னை: பணம் கொடுக்காமல் 5 ஆயிரம் பேரை திரட்டட்டும். அதன்பின்னர் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறட்டும் என திமுகவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வந்தபோது அவர்களை வரவேற்க வந்த இரு கட்சி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மதிமுகவை சேர்ந்த இருவர் காயமடைந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதனை விசாரித்த நீதிபதி மதிமுகவினர் சமரசம் செய்து கொண்டதால் சீமான் உள்ளிட்டோரை அவ்வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். ஒரு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சீமான் காவல் துறை தொடுத்த வழக்கில் அடுத்த மாதம் ஆஜராக வேண்டும்.

சீமான் செய்தியாளர் சந்திப்பு
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் கூறுகையில், இலவசங்களால் ஒரு தேசம் வளராது என்பது அறிவு உள்ளவர்களுக்கு தெரியும். இது மக்களின் வாக்குகளை பெறுவதற்கான வெற்று கவர்ச்சி திட்டம். இலவசங்களை கொடுப்பதற்கான பணத்தை எவ்வாறு ஈட்டுகிறார்கள் என்பதற்கு எந்தவொரு பதிலும் இல்லை. இலவசங்களை கொடுப்பதை எதிர்க்கும் பாஜக, வேளாண் குடிமக்களுக்கு ஏன் ரூ.6 ஆயிரம் கொடுக்கிறார்கள். எனவே இது ஒரு ஏமாற்று வேலை.

கல்வியின் தரம்
பஸ் பாஸ், சைக்கிள் ஆகியவற்றை இலவசமாக பெறும் மாணவர்கள் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று தான் கல்வி கற்கிறார்கள். தனியார் கல்வி நிறுவனங்களை அரசு தான் ஊக்குவிக்கிறது. கல்வி தரத்தை உயர்த்தி கர்நாடகா மற்றும் கேரளாவில் மாணவர்கள் எண்ணிக்கை அரசு பள்ளியில் உயர்ந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அரசு பள்ளியின் தரம் உயரவில்லை. வெளிநாடுகளில் அரசின் சேவை நன்றாக இருக்கிறது. ஆனால் நம் நாட்டில் மட்டும் அரசின் சேவைகள் நன்றாக இல்லை. அன்பில் மகேஷிற்கு முதல்முறையாக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நன்றாக செயல்படக் கூடிய நபர் தான் என்று விமர்சித்தார்.

ஸ்டாலின் பயணம் பற்றி சீமான்
தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினின் கொங்கு மண்டல பயணம் குறித்து பேசிய சீமான், காசு கொடுக்காமல் 5000 பேரை முதலில் திமுக திரட்டட்டும். அதன் பிறகு கோவையில் 50 ஆயிரம் பேர் கூடினார்கள் என்று கூறட்டும். இந்த ஆட்சியை சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும் மக்கள் ஏன் மீண்டும் திமுகவில் இணைந்தார்கள் என தெரியவில்லை. நமக்கு நாமே திட்டம் என்பது அமைச்சர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். மக்களுக்கு நாமம் தான்.

ஆன்லைன் ரம்மி விவகாரம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் நடிகர் சரத்குமார் நடிப்பது தவறு. அவர் அதில் நடிக்க கூடாது. சூது எந்த வடிவில் வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆன்லைன் ரம்மிக்கு கருத்து கேட்பது என்பது முதல் குடிமகன் என்ற அடிப்படையில் முதலில் முதலமைச்சர் அவரின் கருத்தை கூறட்டும். அதன்பிறகு மக்களின் கருத்தை கேட்கட்டும். மக்கள் கருத்தை விட மக்கள் நலனே முக்கியம். அதன் அடிப்படையில் செயல்பட வேண்டும். கருத்து கேட்டால் பல கருத்துக்கள் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வரும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications