நிறைய வேலை இருக்கு! இப்போதைக்கு வேண்டாம்! தர்மயுத்த நாயகனின் திடீர் முடிவு! அப்போ புரட்சிப் பயணம்?
சென்னை : அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்டதாக கூறினாலும், தானே அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறிவரும் ஓ.,பன்னீர்செல்வம் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ள நிலையில் தற்போதைக்கு புரட்சி பயணம் உள்ளிட்ட திட்டங்களை ஒத்திவைத்துவிட்டு தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்ற போராட்டங்களை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிளைச் செயலாளராக அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் ,எதிர்க்கட்சித் தலைவர் எனத் தொடங்கி அதிமுகவின் உச்சபட்ச அதிகாரமிக்க தகுதியான பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றியுள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து ஜெயக்குமார் பற்றவைத்த நெருப்பு இன்று எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் வந்து நின்றிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்
இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்ட சட்ட போராட்டங்கள் அனைத்தும் வீணாகத்தான் போகிவிட்டது. அதே நேரத்தில் அமைதியாக இருந்தாலும் பின்னணியில் மிகத் தீவிரமாக செயல்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முக்கிய நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஒருங்கிணைப்பாளர்
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்து தனது அரசியல் பயணத்தில் சரிவுகளை சந்தித்த நிலையில் தற்போது கட்சியினராலேயே ஓரம் கட்டப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பாளர் பொருளாளர் பதவிகளில் இருந்து மட்டுமல்லாமல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் நீதிமன்றம் தேர்தல் ஆணையம் என அடுத்தடுத்து சட்ட போராட்டங்களை மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களை சந்தித்து நீதி கேட்டு புரட்சி பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் அதிமுக பொதுச்செயலாளர் பதவி தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வரும் சசிகலாவுடன் அவர் சந்திப்பார் எனவும் கூறப்பட்டது.

புரட்சி பயணம் ஒத்திவைப்பு
இந்த நிலையில் சசிகலா குறித்த சந்திப்பு நிகழ்ச்சிகளை மறைமுகமாக மேற்கொண்டு வரும் ஓபிஎஸ் தரப்பு புரட்சி பயணம் உள்ளிட்ட திட்டங்களை தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளது. அதன்படி சென்னையில் உள்ள வீட்டில் அல்லது தேனியில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அதே நேரத்தில் தனது தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொள்ள திட்டப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மற்றும் தேர்தல் ஆணையத்தில் தங்கள் தரப்பு வாதங்களை பலமாக எடுத்துரைப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த வேண்டி இருப்பதாகவும், அதற்காக தொண்டர்களை சந்திப்பது உள்ளிட்ட திட்டங்களை தற்போது ஒத்தி வைக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications