ஓபிஎஸ் மகிழ்ச்சி நீடிக்கலையே.. ‘அப்செட்’ - குறுக்கே விழுந்த ‘3 தடைகள்’ - எழுந்து அமர்ந்த எடப்பாடி!
சென்னை : நேற்று கிடைத்த தீர்ப்பால் உற்சாகத்தில் இருந்த ஓபிஎஸ் டீம், கொண்டாடி முடிப்பதற்குள், மகிழ்ச்சி வெள்ளத்திற்கு அணை போடும் வகையில் மூன்று 'செக்' வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளது ஈபிஎஸ் டீம்.
அதேபோல, உச்ச நீதிமன்றத்தில் நடந்த அலுவலக சாவி வழக்கிலும், ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
உயர் நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டியே, சாவி ஈபிஎஸ் வசம் இருப்பதை மீட்டு விடலாம் எனக் கணக்குப் போட்டது ஓபிஎஸ் டீம். ஆனால், அந்த முயற்சி பலிக்கவில்லை.
ஜூலை11 அதிமுக பொதுக்குழு செல்லாது சென்னை ஹைகோர்ட் தீர்ப்புக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு
தலைமைக் கழக கலவரம்
ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தபோது, ஏற்பட்ட வன்முறை காரணமாக கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இருவரும் தனித்தனியே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலக சாவியை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
அலுவலக சாவி
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேநேரத்தில் இவ்வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் கேவிட் மனு தாக்கல் செய்த நிலையில், இன்றைய தினம் இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி ரமணா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணை தொடங்கியதும் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எடப்பாடி பழனிசாமி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிப்பதாக உத்தரவிட்டார்.
இடைக்கால தடை கோரிய ஓபிஎஸ்
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, நேற்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்திற்கு சாதகமான உத்தரவை வழங்கி இருப்பதாகவும் அதனால் உச்சநீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்து முடிக்கும் வரை சாவியை ஈ.பி.எஸ் வசம் ஒப்படைத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
ஆனால் இந்த வழக்கை தீர விசாரித்த பின்னரே எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க முடியும் எனக் கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, வழக்கை ஒரு வாரத்திற்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக்கூறி ஒத்திவைத்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு அதிமுக தலைமைக் கழக சாவி வழக்கிலும் தங்களுக்கு மைலேஜ் கொடுக்கும் என எதிர்பார்த்திருந்தது ஓபிஎஸ் டீம்.
ஓபிஎஸ் டீம் அப்செட்
ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து பொதுக்குழுவைக் கூட்டும் வரை, அலுவலக சாவி தொடர்பான ஐகோர்ட்டின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படும் என ஓபிஎஸ் தரப்பு எதிர்பார்த்த நிலையில், வாதங்களைக் கேட்காமலேயே, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது ஓபிஎஸ் தரப்பை அப்செட் ஆக்கியுள்ளது.
இன்னொரு செக்
அதேபோல, உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பு, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்த மகிழ்ச்சியை நீடிக்க விடாமல், அடுத்தடுத்து கோர்ட்களில் நடக்கும் சம்பவங்கள் ஓபிஎஸ் தரப்பை டென்ஷனிலெயே வைத்திருக்கின்றன.
மூன்றாவது செக்
மேலும், நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட விரும்பி அழைப்பு விடுத்தார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், அவரது அழைப்பை திட்டவட்டமாக நிராகரித்துள்ள எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழுவில் பலத்தை நிரூபிக்குமாறு சவால் விடுத்துள்ளார். பொதுக்குழுவில் தனக்கு போதிய ஆதரவு இல்லாத நிலையில், ஈபிஎஸ்ஸின் இந்த எதிர்வினை ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இப்படியாக இன்று ஓபிஎஸ் தரப்புக்கு மூன்று அடிகள் விழுந்துள்ளன.