ஓபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை.. பூரித்து போன சசிகலா.. அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி அதிரடி விளக்கம்
ஜெயலலிதாவின் மரணத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை ஓ.பன்னீர் செல்வம் கூறியிருப்பதாகவும் இப்போது மக்களுக்கு அது தெரிந்து விட்டதாகவும் சசிகலா கூறியுள்ளார்.
சென்னை: ஓபிஎஸ் உண்மைச் சொல்லியிருக்கிறார் என்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் இருந்த உண்மைகளை பொதுமக்களும் தெரிந்து கொண்டனர் என்றும் சசிகலா கூறியுள்ளார். என்னுடைய அடுத்த செயல்பாடுகள் நிதானமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மரணமடைந்தார் ஜெயலலிதா. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தர்மயுத்தம் ஆரம்பித்தவர் ஓ.பன்னீர் செல்வம். கடந்த 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் பற்றி
விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என 150க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், ஆணையத்தின் முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

எதுவும் தெரியாது
முதல்நாளில் மூன்றரை மணிநேரம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் பல கேள்விகளுக்கு தெரியாது என்றே கூறினார். ஜெயலலிதாவிற்கு என்ன நோய் இருந்தது என்பது தனக்குத் தெரியாது எனவும் கூறினார். ஜெயலலிதாவை கடைசியாக 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நல பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு பார்த்ததுதான் கடைசி என்று கூறினார்.

எனக்குத் தெரியும்
இரண்டாம் நாளான நேற்று பல கேள்விகளுக்குத் தெரியும் என்று சொன்னார். சசிகலாவை சின்னம்மா என்று கூறினார். அவர் மீது தனிப்பட்ட முறையில் இன்றைக்கும் மதிப்பு மரியாதை உள்ளதாகவும் கூறினார். ஜெயலலிதாவின் மரணத்தில் தனக்கு தனிப்பட்ட சந்தேகம் எதுவும் இல்லை என்றும் கூறினார். மக்களின் சந்தேகத்தை தீர்ப்பதற்காகவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தான் கையெழுத்து போட்டதாகவும் கூறினார்.

சதி திட்டம் தீட்டவில்லை
சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நடத்திய குறுக்கு விசாரணையின் போது பதிலளித்த ஓ.பன்னீர் செல்வம், கடந்த 2011ஆம் ஆண்டோ அதற்குப் பிறகோ ஜெயலலிதாவிற்கு எதிராக சசிகலா குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டவில்லை என்று திட்டவட்டமாக கூறினார். 9 மணிநேர விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம் ஆணையத்தில் உண்மையைச் சொன்னதாக கூறினார்.

சசிகலா ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் நினைத்தனர். சசிகலாவின் மீது சந்தேகம் இருந்தது. அதை தீர்ப்பதற்காகவே ஆணையம் அமைக்கப்பட்டதாகவும் கூறினார் ஓ.பன்னீர் செல்வம். அவரது இந்த வாக்குமூலமும் பதிலும் சசிகலாவையும் அவரது தொண்டர்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சசிகலா பூரிப்பு
தன் மீதான களங்கம் துடைக்கப்பட்டு விட்டதாக நினைத்து முகமெல்லாம் பூரிப்பாக இருக்கிறார் சசிகலா. இன்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, கழகத்தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் நடக்கும் என்றார். தன்மீது மதிப்பு இருக்கிறது என ஓபிஎஸ் சொன்னது உண்மை. அவர் உண்மையைச் சொல்லி இருக்கிறார் என்றும் கூறினார்.

உண்மையை சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ்
ஆறுமுக சாமி ஆணையம் ஆரம்பித்தது நல்லதுதான் பொதுமக்களும் உண்மையைத் தெரிந்துக்கொள்ள வேண்டும் என நான் நினைத்து சொல்லி வந்தேன். நேற்றைய நிகழ்வுகள் அதை நிருபித்துள்ளது. ஆணையத்தில் ஓபிஎஸ் உண்மைச் சொல்லியிருக்கிறார். என்னுடைய அடுத்த செயல்பாடுகள் நிதானமாக இருக்கும் என்றும் சசிகலா மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications