வண்டிய அங்கேயே விடுங்க! நேராக சென்னை செல்லும் ஓபிஎஸ்! வந்ததும் ‘அவரை’ சந்திக்கிறார்? பரபர ட்விஸ்ட்!
சென்னை : சொந்த ஊரான தேனியில் தற்போது தங்கி இருந்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் விரைவில் அவர், சென்னை செல்ல இருப்பதாகவும் விரைவில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சந்திக்கலாம் என்று அவரது தரப்பு ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.
அதிமுகவில் அதிகார மோதல் கடுமையான சிக்கலை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவில் கடந்த கால இணைந்த கைகளாக செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த ஜுலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக 2வது பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதோடு, கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கப்பட்டனர்.

ஓ.பன்னீர்செல்வம்
இந்நிலையில் பல கட்ட போராட்டங்கள் ஆலோசனைகள் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளுக்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அங்கிருந்தே ஆதரவாளர்களுடன் ஆலோசனை, புதிய நிர்வாகிகள் நியமனம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நீக்கம் என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அவருக்கு மகிழ்ச்சி தரும் விவகாரங்களும் நடைபெற்றுள்ளன.

ஆலோசனை
மருத்துவமனையில் இருந்து விடுதியில் தங்கி இருந்து பின்னர் வீடு திரும்பும் அவர் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் புதிய மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு பட்டியல் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

தேனி வருகை
தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சொந்த ஊரான தேனிக்கு நீண்ட இடைவேளைக்கு பின்னர் சென்றார் ஓபிஎஸ். முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். சுமார் 100 கார்களில் திரண்டு வந்திருந்த ஆதரவாளர்கள் மதுரையிலிருந்து தேனி வரை பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பே சற்று அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது.

விரைவில் சென்னை
இதனிடையே தேனியில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டுள்ள ஓபிஎஸ் விரைவில் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் சில முக்கிய நிர்வாகிகளை தனியாக சந்தித்துப் பேச இருப்பதாகவும், அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புகள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்பிறகு சசிகலா டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறுகின்றனர் ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications