‘லேட்டா வந்தாலும்..’ ஓபிஎஸ் போடும் ‘மாஸ்’ பிளான்.. 5 இடங்களில் மாநாடு- ஈபிஎஸ் டீமை அதிரவைக்க திட்டம்
சென்னை : அதிமுகவில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய செயலாளர்களை நியமித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், அடுத்தகட்டமாக 5 இடங்களில் மண்டல மாநாடுகளை நடத்தி மாஸ் காட்ட இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, கோவையில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், சில அரசியல் காரணங்களால் அதனைக் கைவிட்டார் ஓபிஎஸ். இந்நிலையில், 5 இடங்களில் மாநாடு நடத்தி தனது செல்வாக்கை காட்ட இருக்கிறாராம் ஓபிஎஸ்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. ஓபிஎஸ்ஸோ, வெகுசில நிகழ்வுகளில் மட்டுமே தலைகாட்டி வருகிறார்.
இந்நிலையில், தனக்கு தொண்டர்கள் செல்வாக்கு இருப்பதை நிரூபிக்கும் வகையில் தமிழ்நாட்டின் முக்கியமான 5 இடங்களில் மண்டல மாநாடுகளை பிரமாண்டமாக நடத்த ஓ.பன்னீர்செல்வம் தயாராகி வருகிறாராம். இந்த மாநாடுகள், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அடுத்தடுத்து நடைபெறும் என்றும் கூறுகின்றனர் ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

உச்சகட்ட மோதல்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்து தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார். அதேபோல், மற்றொரு புறம் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டி வருகிறார். தலைமைக் கழகம் தொடங்கி ஒன்றியம் வரை கிட்டத்தட்ட அனைத்து மட்டத்திலும் நிர்வாகிகளை நியமித்துள்ளார் ஓபிஎஸ்.

இரண்டு வாரங்களில்
கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு பொதுக் குழுவைக் கூட்டியது. அதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு, இன்னும் இரண்டு வாரங்களில், உச்சநீதிமன்றத்தில் அடுத்தகட்ட விசாரணைக்கு வருகிறது.

பொதுக்கூட்டங்கள்
இதற்கிடையே அதிமுக தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடத்த கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி பெரும்பாலான இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அண்மையில், நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சு தீவிரமாக கவனிக்கப்பட்டது.

ஓபிஎஸ்ஸுக்கு பயம்
ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை தொடர்ச்சியாக சந்தித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார். எனினும், தொண்டர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறி வரும் ஓபிஎஸ் ஏன் இன்னும் பொதுக்கூட்டங்களை நடத்தி தொண்டர்களை சந்திக்காமல் இருக்கிறார், பொதுவெளியில் தனக்கு ஆதரவு இல்லை என்பது அம்பலமாகிவிடும் என்பதாலேயே ஓபிஎஸ் கூட்டங்களை நடத்தாமல் பின்வாங்கி என்று எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மண்டல மாநாடு
இந்நிலையில் தான் அடுத்தகட்டமாக தொண்டர்களைத் திரட்டி பிரமாண்ட கூட்டங்களை நடத்த திட்டமிட்டு வருகிறாராம் ஓபிஎஸ். அதை பொதுக்கூட்டங்களாக இல்லாமல், மண்டல அளவிலான மாநாடுகளாக நடத்தலாம் என்றும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி, சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக மண்டல மாநாடு நடத்த ஓபிஎஸ் அணியினர் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

முழு பலத்தையும்
5 அல்லது 6 இடங்களில் நடைபெறும் இந்த மண்டல மாநாடுகளில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு வந்து தனது செல்வாக்கை காட்ட வேண்டும் என ஓபிஎஸ் விரும்புகிறாராம். 2024 தேர்தல் பேச்சுகள் தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், இதுதான் நமக்கான நேரம், நம் முழு பலத்தையும் காட்ட வேண்டும் எனக் கூறி இந்த மண்டல மாநாடுகளுக்கு பொறுப்பாளர்களை நியமிப்பது பற்றிய ஆலோசனையில் இறங்கி இருக்கிறாராம் ஓபிஎஸ். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம் என உற்சாகமாகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

எப்போது?
உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு இன்னும் 2 வாரத்தில் விசாரணைக்கு வருவதால், தீர்ப்புக்குப் பிறகு இந்த மாநாடுகள் அடுத்தடுத்து நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது. மண்டல மாநாடுகளுக்கான அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வமே விரைவில் அறிவிப்பார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதிமுகவில் ஓபிஎஸ் ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ஈபிஎஸ்ஸுக்கு போட்டியாக மாநாடு நடத்த ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதால் அரசியல் களத்தில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications