அப்படி போடுங்க.. பாஜக-அதிமுக கூட்டணி உறுதி.. ஓபிஎஸ் சொல்வதை பாருங்க
Recommended Video

சென்னை: லோக்சபா தேர்தலில் ஏறத்தாழ பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது முடிவாகிவிட்டது என்பதை, அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டி உறுதிப்படுத்துகிறது.
வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன், அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இவ்விரு கட்சி தலைவர்களும் இந்த விஷயத்தில் இணக்கமாக இருப்பதாகவே தெரிகிறது.
ஆனால் தம்பிதுரை, அன்வர் ராஜா போன்ற அதிமுக எம்பிக்கள் உட்பட சிலர் இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓபிஎஸ் பேட்டி
இந்த நிலையில்தான், சென்னை திருவான்மியூர் பகுதியில் நேற்று நிருபர்களிடம் பேசும்போது, அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர், ஓ.பன்னீர்செல்வம் சூசகமாக தெரிவித்த ஒரு தகவல் இந்த கூட்டணியை உறுதி செய்வதை போல ஆகிவிட்டது. நேரடியாக அவர் பாஜக என்று கூறாவிட்டாலும் கூட பன்னீர் செல்வம் சுற்றி வளைத்து அதைத்தான் கூறினார்.
ஒத்த கருத்துள்ள தேசிய கட்சிகளுடனும், மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என பன்னீர் செல்வம் தெரிவித்தார். ஆனால் இதை ரகசியமாக செய்து வருவதாகவும் குறிப்பிட அவர் மறக்கவில்லை. கூட்டணி உறுதியானதும் உங்களுக்குத்தான் முதலில் தெரெியும் என்று நிருபர்களை பார்த்து அவர் கூறினார்.

பாஜகதான் பாக்கி
தமிழகத்தில் இரு தேசிய கட்சிகள்தான் ஓரளவுக்கான இருப்பு கொண்டவை. அதில் ஒன்று காங்கிரஸ் மற்றொன்று பாஜக. ஆனால் காங்கிரஸ் ஏற்கனவே திமுகவோடு கூட்டணி அமைத்துவிட்டது. எஞ்சியிருப்பது பாஜகதான் என்பதால், அதிமுக, பாஜகவுடன்தான் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தான் பன்னீர் செல்வம் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

சூசகம்
இதுவரை ரகசியமாக இருந்து வந்த இந்த கூட்டணி பேச்சுவார்த்தையை பன்னீர்செல்வம் சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். தம்பிதுரை போன்ற அதிமுக-பாஜக கூட்டணி பிடிக்காத அதிருப்தியாளர்கள் விமர்சனங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதன் நோக்கமும் இதுதான் என்று தெரிகிறது.

தொகுதி உடன்பாடு
இரு கட்சிகள் நடுவே, கூட்டணி ஏறத்தாழ முடிவாகிவிட்டாலும் கூட இரு கட்சிகளும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு செய்ய வேண்டியதுதான் பாக்கி என்று தகவல்கள் கூறுகின்றன.












Click it and Unblock the Notifications