டெல்லிக்கு பறந்த ஆவணங்கள்.. திமுகவுடன் சேர்ந்து உடைக்க சதி.. ஈபிஎஸ் மீது ஓபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு
சென்னை : எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கான ஆவணங்களை தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தொலை நகல் மூலம் அனுப்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
Recommended Video
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கிய நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் 22 பேரை ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கினார்.
இந்நிலையில், தான் கட்சியில் இருந்து நீக்கியதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார் ஓபிஎஸ். எடப்பாடி பழனிசாமி நியமனம் செல்லாது என்றும் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓபிஎஸ் நீக்கம்
அதிமுகவில், ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பினருக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. கடந்த 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கினார். அதனைத் தொடர்ந்து நேற்று மாலை ஓபிஎஸ் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயபிரதீப் உள்ளிட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி உத்தரவிட்டார்.

ஈபிஎஸ் நீக்கம்
அதற்கு பதிலடியாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கட்சி கொள்கை, குறிக்கோள்களுக்கும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி,டி.ஜெயக்குமார், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

22 பேர் நீக்கம்
மேலும், எஸ்.டி.கே.ஜக்கையன், ஆர்.பி.உதயகுமார், ஆதி ராஜாராம், தி.நகர் பி.சத்யா, எம்.கே.அசோக், விருகை வி.என்.ரவி, கே.பி.கந்தன், சி.வி.சண்முகம்,ஆர்.இளங்கோவன், ஓ.எஸ்.மணியன், செல்லூர் கே.ராஜூ, வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையத்தில் தாக்கல்
இந்நிலையில், தான் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியில் இருந்து நீக்கியதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திற்கு தொலை நகல் மூலம் அனுப்பியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதற்காக அந்த 22 பேரையும் அதிமுகவில் இருந்து நீக்கியதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நியமனத்தை எதிர்த்தும் மனு
முன்னதாக, கட்சியின் 15 நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகளை நேற்று முன்தினம் அறிவித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணை பொதுச் செயலாளர்களாகவும், எஸ்.பி.வேலுமணி தலைமை நிலையச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தை எதிர்த்தும் தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஒரு மனுவை தாக்கல் செய்தது.

திமுகவுடன் சேர்ந்துகொண்டு
அந்த மனுவில், கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் அதிமுக நிர்வாகிகள் சிலர், திமுகவுடன் இணக்கமாக செயல்பட்டு, அதிமுகவை உடைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு அங்கீகரிக்கப்படாத, சட்ட விரோதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கட்சி விதிகள் திருத்தப்பட்டுள்ளன. நான் இன்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர்கிறேன். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இன்று வரை அமலில் உள்ளன. அதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டு, ஆணையமும் அங்கீகரித்துள்ளது. இந்த பதவிகளுக்கான காலம் 5 ஆண்டுகள் வரை உள்ளது.

நியமனம் செல்லாது
இந்நிலையில், ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில், கட்சி ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அவ்வாறு செய்ய கட்சி விதியில் அனுமதி இல்லை. இதற்கிடையே, கடந்த 13-ஆம் தேதி இரவு, எந்த ஒரு பொறுப்பாளரின் அனுமதியும் இன்றி, கட்சியின் பல்வேறு பதவிகளுக்கான நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதில் அவர் தன்னை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் என குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்
எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழங்கப்பட்ட, விதிகளை மீறி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது. ஈபிஎஸ் அறிவித்துள்ள விதிகளை மீறிய நிர்வாகிகள் நியமனத்தையும் ஏற்கக்கூடாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications