"எஸ்கேப்".. அப்படியே திமுக பக்கம் திரும்பும் தலைகள்.. ஆடிப்போன ஓபிஎஸ் கேம்ப்.. இடையில் இது வேறயா?
முக்கியமாக மூத்த நிர்வாகிகள் சிலர் திமுக தரப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், சில மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ் கேம்பில் இருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இந்த மாதம் 27ம் தேதி நடக்க உள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்னடைவுகளை சந்தித்து வருகிறார். தேர்தல் தொடர்பான வழக்கிலும், பாஜக ஆதரவில் ஓ பன்னீர்செல்வம் கடும் பின்னடைவை சந்திக்க தொடங்கி உள்ளார்.
அதிலும் கடந்த 48 மணி நேரம் ஓ பன்னீர்செல்வம் அரசியல் ரீதியாக மிகப்பெரிய 2 பின்னடைவுகளை சந்தித்துள்ளார்.
போகியில் பிறந்த ஓட்டக்கார தேவர் பன்னீர்செல்வம்! டீ கடை டூ முதல்வர்! அரசியலில் சாதித்தது, சறுக்கியது!
கோர்ட் உத்தரவு
முதல் விஷயம் கோர்ட் உத்தரவு - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும், அதை பொதுக்குழு உறுப்பினர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் இடம்பெறலாம். வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்து போடட்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்காக மட்டுமே, என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது நேரடியாக எடப்பாடிக்கு ஆதரவான தீர்ப்பாக இல்லை என்றாலும் மறைமுகமாக அவருக்கே ஆதரவாக முடிகிறது. பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக
இரண்டாவது விஷயம் பாஜக ஆதரவு - பாஜக தரப்பும் தற்போது எடப்பாடிக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும். அதிமுக ஒரு அணிக்குள் இருந்தால்தான் திமுகவை எதிர்க்க முடியும். இது பற்றி ஓ பன்னீர்செல்வத்திடம் பேசினேன். ஓ பன்னீர்செல்வத்தின் வேட்பாளரை விட எடப்பாடி தரப்பின் வேட்பாளருக்கு அதிக ஆதரவு உள்ளூரில் உள்ளது. அதனால் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வத்திடம் கேட்டுக்கொண்டேன். ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பளாரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன், என்று அண்ணாமலை கூறி இருந்தார்.
ஓபிஎஸ்
அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், சில மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ் கேம்பில் இருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் கேம்பில் இருந்த கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார். ஓ பன்னீர்செல்வம் கேம்ப்பின் தொடர் தோல்விகளால் அவருக்கு நெருக்கமான பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இனி பொதுக்குழு வழக்கிலும் இதேபோல் நடந்தால் ஓ பன்னீர்செல்வம் தரப்பை அது முடக்கி போடும்.
ஓபிஎஸ்
முக்கியமாக ஓ பன்னீர்செல்வத்தையே நம்பி இருக்கும் நிர்வாகிகளுக்கு அரசியல் ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தும். இந்த நிலையில்தான் சில மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ் கேம்பில் இருந்து வெளியேற வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வர தொடங்கி உள்ளன. முக்கியமாக மூத்த நிர்வாகிகள் சிலர் திமுக தரப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படுகிறது. கோவை செல்வராஜ் போலவே இவர்களும் திடீரென திமுக பக்கம் சாய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்றவர்களுக்கு திமுகவில் நல்ல வரவேற்பு உள்ளதால், பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வந்ததும் திமுக பக்கமே சேர்ந்து விடலாம் என்று திட்டத்தில் இருப்பதாக ஓபிஎஸ் தரப்பிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.