மலைப் பாதைகளில் தொடர் விபத்துகள்.. தமிழக அரசு இதை கவனிக்குதா இல்லையா? ஓபிஎஸ் எழுப்பிய சந்தேகம்!
சென்னை: சுற்றுலா வாகனங்கள் விபத்தில் சிக்கி வரும் நிலையில், மலைப்பாதைகளில் சிறப்பு அனுபவம் பெற்றவர்கள் தான் வாகனங்களை ஓட்டுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
கோடை விடுமுறையை ஒட்டி, தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர். சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கும் நிகழ்வுகளும் தொடர்ந்து வருகின்றன. அண்மையில் ஏற்காட்டில் தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் நேற்று கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில், பவானிசாகர் அணை காட்சி முனை அருகே வந்த போது, சுற்றுலா வாகனம் ஒன்று நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உள்பட 32 பேரும் பலத்த காயமடைந்தனர். பலத்த காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பலனின்றி 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இந்நிலையில் இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று நிலைதடுமாறி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு இரண்டு நாட்கள்கூட ஆகாத நிலையில், தற்போது மேட்டுப்பாளையம் - கோத்தகிரி செல்லும் வழியில் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளாகி 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வந்துள்ள செய்தி என்னை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
மேற்படி விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து இல்லம் திரும்ப வேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். பொதுவாக மலைப் பகுதிகளில் வாகனங்களை ஓட்டுவதற்கு தனி அனுபவம் தேவை. இவ்வாறு சிறப்பு அனுபவம் பெற்றவர்கள் தான் வாகனங்களை ஓட்டுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இந்தக் கடமையை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை இனி வருங்காலங்களில் அரசாங்கம் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
மேற்படி விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிப்பதோடு, படுகாயம் அடைந்துள்ளவர்களுக்கு 2 இலட்சம் ரூபாயும், இலேசான காயமுற்றவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரண உதவி வழங்க வேண்டுமென்று தி.மு.க. அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications