எதிர்க்கட்சி தலைவரையே ஆட்டி வைக்கும் பதவி.. ஓபிஎஸ் போடும் ஸ்கெட்ச்.. களைகட்டப்போகும் அதிமுக கூட்டம்
சென்னை: கொறடா உட்பட அதிமுக சட்டசபை நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் கூட்டம் ஜூன் 14ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கொறடா தேர்வில் பிடிவாதம் காண்பிக்க ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் இணைந்து கூட்டாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதில், வரும் 14ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் நோக்கம் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதுதான். இங்குதான் ஓபிஎஸ் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்கிறார்கள்.

கூட்டு அறிக்கை
அதிமுக சட்டசபை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 14, திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.

அடையாள அட்டை
இந்தக் கூட்டத்தில் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும், இன்னும் பிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும், சட்டசபை உறுப்பினர்கள் அடையாள அட்டையுடன் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொண்டர்கள் வரக்கூடாது
ஜூன் 14 அன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் மட்டுமே நடைபெற உள்ளதால் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அன்றைய தினம் கட்சி நிர்வாகிகளும், கட்சித் தொண்டர்களும் தலைமை அலுவலகத்திற்கு வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, கட்சித் தலைமை அலுவலக வளாகத்திற்குள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்க இயலாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொறடா பதவி
விஷயம் இதுவல்ல. கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளருக்கு கொறடா பதவி தரக் கோரிக்கை விடுக்கப்போவதுதான் விஷயமே என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தேர்தலுக்கு முன்பாக, முதல்வர் வேட்பாளர் தேர்வின்போது தனக்கு அந்த சான்ஸ் வர வேண்டும் என்றார் ஓபிஎஸ். எடப்பாடி விடவில்லை. இதநால் தேனியில் சென்று சில நாட்கள் முகாமிட்டார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் கட்சி நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமி பின்னால் நின்றதால், ஓபிஎஸ் தன் வாயாலேயே எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்மொழிய வேண்டியதாயிற்று.

ஓபிஎஸ் முயற்சிகள் வீண்
தேர்தலில் அதிமுக தோற்றதால் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை வந்தது. அந்த பதவியை பெறவும் ஓபிஎஸ் எவ்வளவோ முயற்சித்தார். அதற்கு பலன் கிடைக்கவில்லை. நம்பர் 2 என்ற அந்தஸ்திலேயே தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதே என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரிடம் தொடர்ந்து குமுறி வருகிறார்களாம். கட்சி ஓருங்கிணைப்பாளர் பதவியும் சில காலம் கழித்து எடப்பாடியிடம் போக வாய்ப்பு இருக்கிறது என்று அவர்கள் காதில் கிசுகிசுக்கிறார்களாம்.

செல்வாக்கான பதவிக்கு ஓபிஎஸ் முயற்சி
எனவேதான் எடப்பாடி பழனிசாமியின் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் சேர்ந்து ஆட்டி வைக்கும் பதவிக்கு ஓபிஎஸ் ஸ்கெட்ச் போடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டசபையில் கட்சியின் உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் பலம் வாய்ந்த பதவி அந்த கட்சியின் கொறடாதான். கட்சியின் தலைவராக இருந்தாலும், சட்டசபையில் கொறடா சொல்வதற்கு மறுப் பேச்சு பேச முடியாது. கொறடா உத்தரவை பிறப்பித்தால் அந்த உத்தரவுப்படிதான் நம்பிக்கை வாக்கெடுப்பு போன்ற தருணங்களில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஓட்டு போட வேண்டும். மீறி, மாற்றி ஓட்டுப் போட்டால் எம்எல்ஏ பதவியை பறிக்க கொறடா பரிந்துரை செய்ய முடியும்.

ஆதரவாளர்கள்
இந்த பதவியை கைப்பற்றினால் சட்டசபைக்குள் அதிமுக அதிகாரம் தன்னிடம் இருக்கும் என நினைக்கிறார் ஓ.பன்னீர் செல்வம். இதை எடப்பாடி தரப்பிடமும் கூறியிருக்கிறார். ஆனால், தன்னுடைய ஆதரவாளார்களில் ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்க திட்டமிட்டு வருகிறார் எடப்பாடி என்கிறார்கள். கே.பி.முனுசாமியை அந்த பதவிக்கு நியமிக்கலாம் என்று எடப்பாடி கருதுகிறாராம். ஆனால் தனக்கு தராவிட்டாலும், தனது ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு கொறடா பதவியை பெற்றுத் தரலாம் என்பது ஓபிஎஸ் திட்டமாக இருக்கிறதாம். எனவே இந்த கூட்டம் களை கட்டப்போகிறது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications