பழைய ஓய்வூதியத் திட்டம்! 2026ல் தபால் வாக்குகளில் அரசு ஊழியர்கள் தந்த சர்ப்ரைஸ்.. தவெகவுக்கு சாதகம்?
சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தாத அதிருப்தியில் இருந்த அரசு ஊழியர்களின் ஆதரவு, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதிமுக எனப் பரவலாகச் சிதறியிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழக அரசியலில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகள், இந்த முறை ஆளுங்கட்சியான திமுகவுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்குகள் தேர்தல் முடிவுகளில் நீண்டகாலமாகப் பங்கு வகித்து வருகின்றன.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்காலங்களில், ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தியது மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கியதன் பின்னணியில் அரசு ஊழியர்கள் மத்தியில் திமுக ஒரு பிம்பத்தைப் பெற்றிருந்தது.
தமிழக அரசு ஊழியர்கள் வாக்குகள்
அதே நேரத்தில், 2003-ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 1.7 லட்சம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கை அரசு ஊழியர்களுக்கும் அதிமுகவுக்கும் இடையே ஒரு மோதல் போக்கை உருவாக்கியது. அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் அந்த அதிருப்தியைப் போக்க அதிமுக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தேர்தல் களத்தில், OPS எனப்படும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது மிக முக்கியமான விவாதப் பொருளாக உள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதாக வாக்குறுதி அளித்தது.
பழைய ஓய்வூதியத் திட்டம்
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதற்குப் பதிலாக, TAPS அதாவது "தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்" என்ற புதிய முறையை அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு அரசு ஊழியர் சங்கங்களிடையே விவாதங்களை ஏற்படுத்தியதுடன், பழைய ஓய்வூதியத் திட்டமே தங்களுக்கு வேண்டும் என்பதில் ஒரு பிரிவினர் உறுதியாக உள்ளனர்.
இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது.
அரசு ஊழியர்கள் தந்த சர்ப்ரைஸ்
இதன் தொடர்ச்சியாக, இந்த முறை தபால் வாக்குப்பதிவில் திமுக, அதிமுக மற்றும் த.வெ.க. ஆகிய கட்சிகளுக்கிடையே அரசு ஊழியர்களின் வாக்குகள் பிரிந்துள்ள சூழல் காணப்படுகிறது. சில தொகுதிகளில் தபால் வாக்குகள் இந்த மூன்று கட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமின்றி, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
நிர்வாக ரீதியாக, "உங்களுடன் ஸ்டாலின்" போன்ற தொடர் முகாம்கள் மற்றும் கூடுதல் பணிச்சுமை குறித்து அரசு அலுவலர்களிடையே விமர்சனங்கள் நிலவுகின்றன.
கடந்த காலங்களில் ரேஷன் கடை ஊழியர் சங்கங்கள், வருவாய்த்துறை சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டங்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் "சம வேலைக்கு சம ஊதியம்" கோரிக்கை போன்ற தொடர் போராட்டங்கள் நடந்தன.
3 முனைகளாக பிரிந்த வாக்குகள்
மேலும், காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் நடத்திய போராட்டங்களுக்கும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்ற கருத்து ஊழியர்களிடையே உள்ளது. இத்தகைய நிலுவையில் உள்ள கோரிக்கைகள் தபால் வாக்குப்பதிவில் பிரதிபலித்துள்ளன.
பழைய ஓய்வூதியத் திட்ட விவகாரம் மற்றும் நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் காரணமாக அரசு ஊழியர்களின் வாக்குகள் இந்த முறை திமுக, அதிமுக மற்றும் த.வெ.க. என 3 முனைகளாகப் பிரிந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது...!!












Click it and Unblock the Notifications