கோயம்பேடு குளறுபடி.. முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட வேண்டும்.. கோர்ட்டுக்கு போக போறோம்: ஆம்னி அதிரடி
சென்னை: பயணிகள் நலன் கருதி, கோயம்பேடு - கிளாம்பாக்கம் விவகாரத்தில், உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாட போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.. ஆனால், கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த போதிய இடம் இல்லை என ஆம்னி பஸ் சங்க தலைவர் அன்பழகன் கூறினார்.

எச்சரிக்கை: அரசு எச்சரித்தும்கூட, ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் செல்ல மறுத்ததால், நேற்று முதல் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டிலிருந்து இயக்குவதற்கு முழுமையாக தடை செய்யப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அதிரடியாக அறிவித்தார்.
அரசின் இந்த முடிவை ஏற்க மறுத்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது. எனவே, போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, பஸ் ஸ்டாண்டின் நுழைவாயில்கள் அனைத்தும் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. இறுதியில் கோயம்பேடு பஸ் நிலையம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
பயணிகள் குழப்பம்: மற்றொருபுறம் கிளாம்பாக்கம் போவதா? கோயம்பேடு போவதா? என தெரியாமல் குழம்பினார்கள்.. இதனால் இரவு 7 மணிக்கு பிறகு ஆம்னி பஸ்களும், பயணிகளும் கோயம்பேட்டிற்குள் செல்ல முடியாத நிலைமை உருவானது.
இது குறித்து, முன்பதிவு செய்த பயணியர் சொல்லும்போது, "ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது குறித்து, எங்களுக்கு எந்த தகவலும் தரப்படவில்லை.. இங்கு வந்தபோது, கிளாம்பாக்கத்திற்கு போகும்படி போலீசார் சொல்கிறார்கள்..
ஆனால், ஆம்னி தரப்பில் முன்கூட்டியே தகவல் எதுவும் சொல்லவில்லை.. சில ஆம்னி பஸ்ஸிலிருந்து போன் வந்தது.. கோயம்பேடில் வந்து எங்களை ஏறிக்கொள்ளும்படி சொன்னார்கள்.. ஆனால், நாங்கள் கோயம்பேடு வந்தபோது, ஆம்னி பஸ்ஸை, உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.. கடைசி நேரத்தில் நாங்கள் எங்கே செல்வது?" என்று கலங்கி கேட்கிறார்கள்.
ஈசிஆர்: இதனிடையே, நேற்றிரவு முதல் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி ஈசிஆர் சாலையில் செல்லும் ஆம்னி பேருந்துகளை தவிர, மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் புதிய நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகருக்குள் பயணியரை ஏற்றுவதோ, இறக்குவதோ அனுமதிக்கப்படாது என்றும், இதை மீறி பயணியருக்கு உரிய தகவலை வழங்காமல், அவர்களை தேவையில்லாமல் சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பஸ் நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மறுப்பு: ஆனால், அனைத்து ஆம்னி பஸ் தரப்பிலோ, பிடிவாதம் தொடர்கிறது.. இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் சொன்னதாவது:
"கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் 144 ஆம்னி பஸ்கள் தான் நிறுத்தி வைக்க முடியும். கோயம்பேடு ஆம்னி நிலையத்தை உடனடியாக காலி செய்யும்படி சொன்னால், நாங்கள் எங்கே கொண்டு போய் பஸ்களை நிறுத்துவது? ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை 2 நாட்களில் உடனே கிளாம்பாக்கத்திற்கு எப்படி மாற்ற முடியும்? இன்னைக்கு தைப்பூசம், நாளைக்கு குடியரசு தினம்.. இப்படி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.
கோர்ட்: இந்த 4 நாளில் மட்டும் 60,000 பயணிகள், 90 நாட்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு செய்துள்ளனர். இந்த விடுமுறை நாட்களில் இதுவரை 2 லட்சம் பயணிகள் ரிசர்வ் செய்திருக்கிறார்கள்.. ஆனால், 2 நாட்களில், மாற்றியே தீர வேண்டும் என்று ஏன் தீவிரமாக நடவடிக்கை எடுக்கின்றனர் என்பது தெரியவில்லை.. எனவே, பயணிகளின் நலன் கருதி உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு இந்த பிரச்சனைக்கு பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் கோர்ட்டை நாட உள்ளோம்" என்றார்.












Click it and Unblock the Notifications