அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி... மனம் குளிர முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்துள்ளதையடுத்து, தமிழக மக்கள் மகிழும்படியாக பல புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
சென்னை: திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒராண்டு நிறைவடைந்து இன்று இரண்டாம் ஆண்டில் பயணிகிறது. சட்டசபையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் மக்கள் மனம் குளிரும் வகையில் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்று, பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக அரியணை ஏறினார். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று கூறி முதலமைச்சராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.
ஓராண்டு நிறைவு கொண்டாட்டமாக, தலைமைச் செயலகம், சட்டசபை வளாகம், அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மு.க ஸ்டாலின்
முதல்வர் இன்று தனது இல்லத்திலிருந்து புறப்பட்டு, தனது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கிருந்து சட்டசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தலைமைச் செயலகம் சென்றார்.

ஓராண்டு கொண்டாட்டம்
முதல்வர் மு.க ஸ்டாலின் இன்றைய தினம் தனது ஓராண்டு கால அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு பேசினார். மகளிருக்கு இலவச பேருந்து பயணம், இல்லத் தேடி கல்வித்திட்டம், 48 மணி நேர திட்டம் உள்ளிட்ட பல சாதனைகளைப் பட்டியலிட்டார் ஸ்டாலின்.

முக்கிய அறிவிப்புகள்
தேர்தலின்போது திமுக அளித்த 500 வாக்குறுதிகளில், 200 வாக்குறுதிகளுக்கு மேல் நிறைவேற்றப்பட்டு விட்டதாக ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருந்தாலும், குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு போன்ற தேர்தலின்போது அளித்த முக்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

சர்ப்ரைஸ் தருவாரா?
எதிர்க்கட்சிகளி்ன் இந்த விமர்சனத்துக்கு பதிலடி தரும் விதத்தில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, டீசல் விலை குறைப்பு ஆகிய இரண்டு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்புகள் எதுவும் இன்றைய தினம் வெளியாகவில்லை.

மனம் குளிரும் அறிவிப்புகள்
முதல்வர் மு.க ஸ்டாலின் இன்றைய தினம் ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அரசுப்பள்ளிகளில் தொடக்கப்பள்ளி பயிலும் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று கூறினார். முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், அனைத்து மாணவர்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
டெல்லியைப் போல் தமிழ்நாட்டில் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிகள் மேம்படுத்தப்படும். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் 234 தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் இதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருப்பது போல நகரங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். 25 மாநகராட்சிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள்.708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications