சரத்குமார், பிரேம் ஜி பண்றது வெட்ககேடு.. "கைது பண்ணி ஜெயிலில் போடுங்க.." போலீசில் பரபர புகார்
சென்னை: ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் நடித்த சரத்குமார், பிரேம்ஜி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என போலீஸில் ஒரு பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் தமிழ் வேந்தன். இவர் போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதை நீங்களே பாருங்கள்:
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் மூழ்கி கிடக்கிறார்கள். பலர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களாக மாறிவிட்டனர். இத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் ரம்மி சூதாட்டத்தை திரைத்துறை பிரபலங்கள் வாயிலாக விளம்பரம் செய்வது வெட்கக் கேடானது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா.. அமைச்சர் ரகுபதியே ஒப்புக் கொண்டாரே.. பாயிண்டை பிடித்த அண்ணாமலை
ஆன்லைன் ரம்மி சூதாட்டம்
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என நடிகர்கள் சொல்லும் போது அதை பொதுமக்கள் உண்மை என நம்பி விடுகிறார்கள். அந்த நடிகர்களின் ரசிகர்கள், சூதாட்டத்தில் மூழ்கி வாழ்வை சீரழித்துக் கொள்கிறார்கள். விளம்பரங்களில் நடிப்பது எங்கள் தனிப்பட்ட உரிமை என நடிகர்கள் தெரிவிப்பது ஏற்புடையது அல்ல.
சமூக பொறுப்பு
அவர்களுக்கும் சமூக பொறுப்புணர்வு உள்ளது. ஆன்லைன் ரம்மி சூதாட்டம் குறித்த விளம்பரத்தில் நடித்துள்ள சரத்குமார், முன்னாள் எம்எல்ஏ ஆவார். அவர் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் கூட. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் தொண்டர்களும் இருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது இவர் ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தால் அது அவருடைய பின்தொடர்பாளர்களுக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும்.
கங்கை அமரன் மகன்
அது போல் பிரேம்ஜியின் தந்தை கங்கை அமரனும் சமூகபொறுப்பு மிக்கவர். பாஜகவில் உள்ளார். அப்படிப்பட்டவரின் மகன் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தில் நடித்திருப்பது மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் சரத்குமார், பிரேம்ஜி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் நடித்துள்ள ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த அளவு பணம்
ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஆரம்பத்தில் குறைந்த அளவு பணத்தை வைத்து விளையாடும் போது வெற்றி பெற்றால் சற்று அதிக பணம் கிடைக்கிறது. இதனால் பணத்திற்கு ஆசைப்பட்டு அதிக பணத்தை வைத்து விளையாடும் போது தோல்வி அடைகிறார்கள். இவ்வாறு விட்டதை பிடிக்க வேண்டும் என எண்ணி பல ஆயிரங்கள், லட்சங்களை விட்டுவிட்டு இறுதியாக கடன் தொல்லையால் தங்கள் உயிரையே விட்டுவிடுகிறார்கள்.
தற்கொலைகள் அதிகம்
இதனால் இறந்தவரின் குடும்பம் கடன் சுமைக்குள்ளாக்கி நடுத்தெருவில் நிற்கும் நிலை உள்ளது. எனவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதையடுத்து தமிழக அரசு கடந்த அக்டோபர் மாதம் தமிழக சட்டசபையில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு தடை விதிக்க அவசர சட்டம் போட்டு அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அந்த மசோதா மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் மசோதா காலதாமதமாகிவிட்டதாக தமிழக அரசும் திமுக கூட்டணி கட்சிகளும் குற்றம்சாட்டின.
ஆளுநருடன் ஆலோசனை
மேலும் பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆன்லைன் சூதாட்டம் எனப்படும் அரக்கனை ஒழிக்க நினைத்து தமிழக அரசு போட்ட அவசர சட்டத்தை காலாவதியாகும் வரை ஆளுநர் ஆர்.என். ரவி அலட்சியம் காட்டியது சரியல்ல என கூறியிருந்தன. இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சென்று ஆலோசனை நடத்தியுள்ளார்.