அதிமுகவை பிளவுபடுத்த முடியாது.. கட்சியை காக்கவே போராடுகிறேன்..! கலங்கிய எடப்பாடி.. உருகிய தொண்டர்கள்
சென்னை: ஒட்டன்சத்திரம் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அங்கு உருக்கமாகப் பேசினார்.
ஒரு புறம் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் தொடரும் நிலையில், மறுபுறம் கட்சிக்குள் தனது ஆதரவை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.

உருக்கம்
ஒட்டன்சத்திரம் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அங்குச் சற்று உருக்கமாகப் பேசினார். திருமண விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, " அதிமுகவை யாராலும் பிளவுபடுத்த முடியாது. நான் பொறுப்பேற்றதில் இருந்து கட்சியைக் காப்பாற்ற இன்று வரை போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். ஆட்சியில் இருக்கும் போதும் போராடிக் கொண்டுதான் இருந்தேன். தற்போது எதிர்க் கட்சியாக இருக்கும் போதும் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன்" என்று உருக்கமாகப் பேசினார்.

அதிமுக பொதுக்குழு விவகாரம்
திண்டுக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர், சென்னை செல்ல திருச்சி விமான நிலையம் வந்த எடப்பாடி பழனிசாமி அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த விவகாரத்தில் நாங்களும் அபிடவிட் தாக்கல் செய்துள்ளோம்.

திமுக உடன் தொடர்பு
புதுமை பெண் திட்டத்திற்கு ஓ பி ரவீந்திரநாத் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் திமுகவுடன் தொடர்பில் இருக்கிறார் என்பதை அவரே காட்டிவிட்டார். திமுகவுடன் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இப்போது கூட்டுறவுச் சங்க தேர்தலை அறிவித்துள்ளனர். திமுகவில் ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் எப்படி நியமற்ற முறையில் நடைபெற்றதோ அதேபோலத் தான் கூட்டுறவு தேர்தலும் நிச்சயம் நடைபெறும். இது நியாயமாகத் தேர்தலாக இருக்காது.

இலவசத் திட்டங்கள்
இலவசத் திட்டங்களால் எந்த பயனும் இல்லை எனப் பிரதமர் கூறியுள்ளதாகச் சொல்கிறீர்கள். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. அது அவரது கட்சியின் நிலைப்பாடு. ஒரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. அதிமுகவிற்கு என ஒரு கொள்கை இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

தமிழகம் ஆன்மீக பூமி
தொடர்ந்து பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரைத் தமிழகம் எப்போதும் ஆன்மிகம் நிறைந்த பூமி தான். இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் அவர்களின் மதம் புனிதமானது. அந்தந்த தெய்வம் அவர்களுக்குப் புனிதமானது. என்னைப் பொறுத்தவரை எல்லா சாமியும் கும்பிடுவேன். ஆன்மீகம் என்பது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.

போதைப்பொருள்
தமிழ்நாட்டில் இப்போது அதிகமாகப் போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது. இந்த அரசு அதைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது. ஆன்லைன் ரம்மியும் தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் அதைச் செய்யாமல், மக்களிடம் கருத்துக் கேட்கிறது இந்த அரசு. இப்போது இந்த அரசு திறந்து வைக்கும் சாலைகள், பாலங்கள் எல்லாம் நாங்கள் கொண்டு வந்த திட்டம் தான். கொள்ளிடம் அணை நாங்கள் போட்ட திட்டம் தான்.. ஆனால் திமுக அரசு இதற்கும் "ரிப்பன் கட் பன்னி" திறந்து வைப்பார்கள் பாருங்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications