சென்னை வந்தார் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா.. மாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!
சென்னை: குடியரச்த் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களை சந்திப்பதற்காக சென்னை வந்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான வேலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கின.
இந்தியாவுக்கு ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி தேவை இல்லை.. சிந்திக்க கூடியவர் தேவை! யஷ்வந்த் சின்ஹா கருத்து
வேட்பாளர்கள் யார்?
இதனைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். முறையே இவர்கள் இருவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆதரவு திரட்டும் யஷ்வந்த் சின்ஹா
இதனைத்தொடர்ந்து மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பல்வேறு மாநிலங்களுக்கும் யஷ்வந்த் சின்ஹா பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கேரளா சென்ற அவர், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிலையில், அடுத்ததாக தமிழ்நாடு வந்துள்ளார்.
மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ள அவர், இன்று மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
Recommended Video
யஷ்வந்த் சின்ஹா திட்டம்
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் சந்திப்புக்கு பின், மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் இரவு சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கும் அவர், நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சத்தீஸ்கர் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.