'கூரையில் பாய்ந்த குண்டு'.. மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்க..இது உங்கள் கடமை.. ஓ.பி.எஸ் கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் உள்ள துப்பாக்கிச்சுடும் மையங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். . இதைச் செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு அரசிற்கு உண்டு என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், 'புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு அப்பாவி சிறுவனின் உயிரை பறித்து ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில், பெரம்பலூர் மாவட்ட விவசாயி வீட்டின் மேற்கூரையை துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது

கூரையில் பாய்ந்த குண்டு
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்கிற விவசாயி அப்பகுதியில் உள்ள கல்நார் கூரையுடன் கூடிய வீட்டில் வசித்து வருவதாகவும், இந்த வீட்டின் பின்புறம் சிறிது தூரத்தில் உள்ள மலைப் பகுதியில் துப்பாக்கி சுடும் மையம் செயல்படுவதாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வீட்டின் கூரைப்பகுதியில் இருந்து ஏதோ சத்தம் கேட்டதாகவும், இந்த நிலையில் கூரைப் பகுதியில் துளை ஏற்பட்டதையும், அதிலிருந்து வெளிச்சம் ஊடுருவியதையும் கண்டதும் தன் மகனை விட்டு மேற்கூரையில் ஏறிப் பார்க்கச் சொன்னதாகவும், ஏணி வைத்து ஏறிப் பார்த்ததில் அங்கு ஒரு துப்பாக்கி குண்டு கிடந்ததாகவும், இதுகுறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயிற்சி
இந்த நிலையில் அதே வீட்டின் மற்றொரு பகுதியிலிருந்து மேலும் ஒரு தோட்டாவை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக செய்தி வந்துள்ளது. வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அருகில் உள்ள மலைப் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயிற்சியில் ஈடுபட்டதும், பயிற்சியின் போது அவர்கள் பயன்படுத்திய குண்டுகள் விவசாயி வீட்டின் மேற்கூரையைதுளைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. நல்ல வேளையாக யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

மக்கள் பீதி
இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவந்தாலும், இதே காரணத்திற்காக நாம் ஒரு சிறுவனை அண்மையில் இழந்திருக்கின்ற நிலையில், நாரணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடும் பீதியில் உள்ளனர். இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களிடையே வலுத்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் துப்பாக்கிச் சுடும் மையங்களிலும் - போதிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும், பாதுகாப்பு ஏற்படுத்த முடியவில்லை என்ற சூழ்நிலை வந்தால் அங்கு பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்பதும், இனி வருங்காலங்களில் துப்பாக்கி சுடும் பயிற்சியினால் விபரீதம் ஏதும் ஏற்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டுமென்பதும் பொதுமக்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது. இதைச் செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு அரசிற்கு உண்டு.

வேறு இடத்துக்கு மாற்றணும்
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து துப்பாக்கிச் சுடும் மையங்கள் மக்களுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்யவும், ஆய்வின் அடிப்படையில் பயிற்சியை மேற்கொள்ளத் தேவையான அனுமதியினை வழங்கவும், ஆய்வின் முடிவு வேறு மாதிரி இருக்கும்பட்சத்தில் துப்பாக்கிச் சுடும் மையத்தினை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications