அவங்க தான் பெரிய வேலைய பாத்துட்டு போயிட்டாங்க! நல்லா இருந்த பன்னீரும்.. கூடவே இருந்த 3 பேரும்!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக மூன்று முறை இருந்த ஒ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று தனித்து செயல்பட வேண்டிய நிலையில் இருக்கிறார். கடைசியாக அவர் பங்கேற்ற அதிமுக பொது குழுவில் அவர் உடன் நின்று முழக்கமிட்ட மூவர், இன்று திமுகவிலும், தமிழக வெற்றிக் கழகத்திலும் இணைந்து விட்டனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கட்சியும் ஆரம்பிக்க முடியாமல், கூட்டணியும் சேர முடியாமல் தவிர்த்து வருகிறார்.
அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தமிழக அரசியலில் தற்போது, அதிமுக- பாஜக தலைமையிலான ஒரு கூட்டணியும், திமுக-காங்கிரஸ் தலைமையிலான இன்னொரு கூட்டணியும் தேர்தல் களத்திற்கு தயாராகி வருகின்றன.
இந்த சூழலில், அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக அளிக்கும் முக்கியத்துவம், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில், பிரதமர் மோடியின் அருகில் எடப்பாடி பழனிசாமியை அமர வைத்து பாஜக முக்கியத்துவம் அளித்தது.

ஓ.பன்னீர்செல்வம்
இது ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில், அந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காமல் புறக்கணித்தது, அவரது ஆதரவாளர்களிடையே பாஜக மீது கடும் மனக்கசப்பை உருவாக்கியுள்ளது. கடைசி நேரத்தில் எப்படியாவது பாஜக சமரசம் பேசி, ஓ.பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் மீண்டும் அதிமுகவில் இணைத்து விடும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை முற்றிலும் பொய்யாகிப் போனது.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்குப் பின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்த நிலையில், தற்போது கடைசி நேரத்தில் ஓபிஎஸ் தரப்பை முற்றிலும் புறக்கணித்துவிட்டதாகவே அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், என்டிஏ கூட்டணியிலிருந்து விலகினாலும், திமுக-காங்கிரஸ் கூட்டணியிலும் இணைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதையும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.
திமுகவில் இணைவு
இதனை அடுத்து தான் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் பலரும் திமுகவுக்கு தாவி வருகின்றனர். மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், சுப்புரத்தினம் என பலரும் தற்போது திமுகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட போது அவர் தரப்பில் நின்ற முக்கியமானவர்களின் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். அவர்கள்தான் எம்எல்ஏக்களாகவும் இருந்தனர்.
அதிமுக ஓபிஎஸ் பிரச்சனை
ஓபிஎஸ் தொடர்பான வழக்குகளில் வழக்கறிஞரான மனோஜ் பாண்டியனும் ஆஜராகி வாதிட்டு வந்தார். தற்போதைய சூழலில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் இருந்த முக்கிய புள்ளிகள் திமுகவுக்கு தாவி இருக்கின்றனர். கடைசியாக அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றபோது அங்கிருந்தவர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசி கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். அப்போது மேடையில் இருந்து அமைதியாக தான் வெளியேறினார் ஓ. பன்னீர்செல்வம்.
ஓபிஎஸ் தனிமை
ஆனால் அவர் உடன் இருந்த மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் மேடையில் முளைக்கமிட்டவாறு வெளியேறினார். தற்போது அவர்கள் தான் முதல் ஆட்களாக திமுகவிலும் தமிழக வெற்றிக் கழகத்திலும் இணைந்துள்ளனர். அவர்களை நம்பி தனி கட்சி ஆரம்பிக்கலாம் என நினைத்திருந்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது கட்சியும் ஆரம்பிக்க முடியாமல், கூட்டணிலும் சேர முடியாமல், அதிமுக பக்கமும் செல்ல முடியாமல் தவித்து வருகிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications