பொதுக் குழு சுமூகமாக நடக்க.. கடவுளை வேண்டி கொள்கிறேன்! ஓபிஎஸ் உருக்கம்! இபிஎஸ் தரப்புக்கும் மெசேஜ்?
சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக் குழுவில் சுமூகமான முடிவு எட்டப்பட வேண்டும் என்று நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன், நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் மறைந்த போது அதிமுகவில் எப்படியெல்லாம் பிரச்சினை வந்ததோ அது போன்று ஜெயலலிதா மறைந்த போதும் அதிமுகவில் பிரச்சினைகள் வந்தன. அப்போது கட்சி இரண்டாக பிளவுபட்டது போல் 2017இலும் பிளவுப்பட்டது.
பின்னர் இரு அணிகளும் இணைய ஓபிஎஸ், சசிகலலா குடும்பத்தினரை மீண்டும் இந்த கட்சியில் சேர்க்கக் கூடாது என ஓபிஎஸ் வலியுறுத்தினார். அதை எடப்பாடி தரப்பும் ஒப்புக் கொண்டது. இதனால் இரு அணிகளும் இணைந்து ஒருங்கிணைந்த அதிமுக மீண்டும் துளிர்ந்தது.

துணை முதல்வர்
இதன் வாயிலாக ஓ பன்னீர் செல்வம் துணை முதல்வரானார். அவரது அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு அதற்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

ஈபிஎஸ்
ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமை பொறுப்பிலும் (முதல்வர்) கட்சியில் ஓபிஎஸ் தலைமை பொறுப்பிலும் (ஒருங்கிணைப்பாளர்) இருந்தனர். பெயரளவுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த அதிமுக இருந்ததாகவும் அவ்வப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே பனிப்போர் வெடித்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

கையெழுத்து
வேட்பாளர் தேர்வு, கட்சி பதவிக்கான தேர்வு என எத்தனையோ விஷயங்களில் எடப்பாடி பழனிச்சாமியின் கையே ஓங்கி இருந்தது. ஓபிஎஸ் தனது எதிர்ப்பை தெரிவிப்பார், ஆனால் மூத்த நிர்வாகிகள் அவரை சமாதானம் செய்து எடப்பாடி எடுக்கும் முடிவுக்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்து போட செய்துவிடுவார்.

எதிர்க்கட்சித் தலைவர்
இப்படியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி, அதிமுக கொறடா உள்ளிட்ட பதவிகளை ஓபிஎஸ் விட்டுக் கொடுத்த நிலையில் ஒற்றைத் தலைமை என்ற ஒரு பிரச்சினை ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. செவ்வாய்க்கிழமை நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து விவாதித்ததாகவும் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ஒற்றை தலைமையை விரும்பியதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

3 நாட்கள்
அன்று முதல் 3 நாட்களாக தமிழகத்தில் அதிமுக தொண்டர்கள் பரபரப்பாக காணப்படுகிறார்கள். இரு தலைமைக்கு ஆதரவாகவும் போஸ்டர் ஒட்டுவது , அதை எதிர் தலைமை கிழிப்பதும் என இருந்தது. தொண்டர்கள் இன்றைய தினம் ஜெயக்குமாரின் கார் மீது தாக்குதல் நடத்தினர். அங்கு அவரை ஆபாச வார்த்தைகளால் வசை பாடினர்.

பிரச்சினைகள்
இந்த நிலையில்தான் நடக்கும் பிரச்சினைகளை எதிர் தரப்பினருக்கும் மாநில மக்களுக்கும் தெளிவுப்படுத்த ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் சுமூகமாக முடிவு எட்டப்பட வேண்டும் என்று கடவுளை நான் வேண்டிக்கொள்கிறேன். நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள்.

எதிர்க்கட்சி
அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்படுவது அதிமுக மட்டுமே. ஒற்றைத் தலைமை தேவையா, இல்லையா என்பதை எடப்பாடி பழனிசாமிதான் சொல்ல வேண்டும். 14 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவின் முடிவுக்கு ஈபிஎஸ் உடன்பட வேண்டும். ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்த முடியாது. சசிகலா விவகாரத்தில் தலைமை நிர்வாகிகளே முடிவு செய்வார்கள். தொண்டர்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கக் கூடாது என்பது எனது நோக்கம் என்றார்.

இரு விஷயங்கள்
இந்த பேட்டியில் உற்று கவனித்தோமேயானால் இரு மெசேஜ்கள் உள்ளன. அதாவது அதிமுகவில் தலைவர் பதவியை மாவட்ட செயலாளர்கள் உருவாக்க முடியாது, தொண்டர்கள் தான் தேர்வு செய்ய முடியும் என ஓபிஎஸ் கூறியுள்ளார். இதன் மூலம் மாவட்டச் செயலாளர் மத்தியில் தனக்கு ஆதரவு இல்லை என்பதையே அவர் புரிந்து கொண்டார். அதே சமயம் ஒற்றை தலைமை வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் விரும்புகிறார்கள் என கூறிய எதிர்தரப்புக்கும் தொண்டர்கள் எல்லாமே என்பதையும் புரிய வைத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications