சும்மா இருந்த சங்கை ஊதியது யார்? ஓபிஎஸ் மகன் மீது பாயும் அதிமுக நிர்வாகிகள்! பின்னணி இது தான்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் இன்று இந்தளவுக்கு சிக்கல் எழுவதற்கு காரணமே அவரது மூத்த மகன் ரவிந்தரநாத் தான் எனக் கூறப்படுகிறது.
திமுகவை எதிர்த்து வழக்குகளை எதிர்கொண்டு இபிஎஸ் அரசியல் செய்து வரும் சூழலில், திமுக ஆட்சியை ரவீந்தரநாத் பாராட்டியது தான் பிரச்சனையின் அடித்தளமாக பார்க்கப்படுகிறது.
செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூட, ரவீந்தரநாத் செயல்பாடு குறித்து ராஜன் செல்லப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒற்றைத் தலைமை
அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற முழக்கம் எழுவதற்கு காரணமே ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்தரநாத் தான் எனக் கூறப்படுகிறது. திமுகவை எதிர்த்து கடுமையாக இபிஎஸ் அரசியல் செய்து வரும் நிலையில், கோட்டைக்குச் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, நன்றாக ஆட்சி நடத்துகிறீர்கள் என ரவீந்தரநாத் எம்.பி. பாராட்டிய விவகாரம் தான் இன்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக இவ்வளவு தூரம் சிக்கலை உண்டாக்கியுள்ளது.

திமுக எதிர்ப்பு
பொதுவாகவே ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை திமுக எதிர்ப்பில் கடுமை காட்டமாட்டார் என்ற ஒரு பிம்பம் இருந்து வருகிறது. பல முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வழக்குகளை சந்தித்து வருகின்றனர். இந்தச் சூழலில் திமுகவுடன் என்ன உறவு வேண்டி கிடக்கு இவர்களுக்கு என்ற அவர்களது அதிருப்தியின் வெளிப்பாடு காரணமாகவே ஓபிஎஸ் ஸை ஓரங்கட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

ராஜன் செல்லப்பா
இதனிடையே இதனை உறுதிப்படுத்தும் வகையில் ராஜன் செல்லப்பாவும் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் மகன் எதற்காக சந்திக்க வேண்டும், எதற்காக ஆட்சியை பாராட்ட வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். ஓபிஎஸ் மகன் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி புரிவதை பாராட்டி விட்டு சென்றதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஊரெங்கும் மேடை போட்டு பேசி வருகிறார்.

சென்னையில் நிர்வாகிகள்
தவளை தன் வாயால் கெடும் என்பதை போல் திமுக ஆட்சியை பாராட்ட போய் இன்று தனது தந்தைக்கு வம்பை விலைக்கு வாங்கித் தந்துள்ளார் ரவீந்தரநாத் எம்.பி. அதிமுக பொதுக்குழுவுக்கு இன்னும் 4 நாட்கள் உள்ள போதும் இப்போதே அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் குவிந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications