அந்த பதவி கேட்டு மிரட்டினார் கோவை செல்வராஜ்.. ஓபிஎஸ் கொடுக்கல! கிளம்பிட்டாரு! நாஞ்சில் கோலப்பன் பரபர
சென்னை : அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பதவி கேட்டு கடந்த ஒரு மாதமாக கோவை செல்வராஜ் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருந்தார், ஓபிஎஸ்ஸையே மிரட்டினார், ஆனால் அவரது மிரட்டலுக்கு ஓபிஎஸ் பணியவில்லை எனக் கூறி இருக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன்.
அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் இருந்து வந்த கோவை செல்வராஜ், அதிமுகவில் இருந்து விலகி இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
ஓபிஎஸ், ஈபிஎஸ் சுயநலமாகச் செயல்படுவதால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார் கோவை செல்வராஜ். ஆனால், அவர் பதவி கேட்டு ஓபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுத்து வந்ததாக பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் நாஞ்சில் கோலப்பன்.
சுக்கு நூறாக அதிமுக
அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு இடையே, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து தொடர்ப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, அதிமுக சுக்குநூறாக உடைந்து போயுள்ளது ஜெயலலிதாவின் நினைவுநாள் அன்று நடைபெற்ற நிலவரங்கள் உறுதி செய்தன. ஓபிஎஸ் சார்பாக சுமார் 4 ஆயிரம் பேர், எடப்பாடி சார்பாக 3 ஆயிரம், டிடிவி தினகரன் சார்பாக 3 ஆயிரம், சசிகலா சார்பாக ஆயிரக்கணக்கானோர் என அணி பிரிந்து வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றனர்.
சுயலாபம் - குற்றச்சாட்டு
இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகியாச் செயல்பட்டு, எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த கோவை செல்வராஜ், அதிமுகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எடப்பாடி, பன்னீர்செல்வம் இருவரது செயல்பாடுகளை பார்க்கும்போது, இவர்களோடு சேர்ந்து பணியாற்ற எனக்கு விருப்பம் இல்லை. அதிமுக என்ற பெயரில் சுயநலத்துக்காகச் சண்டைபோடுகிற இவர்களுடன் சேர்ந்துகொண்டு நாமும் கட்சியை அழிக்கிற முயற்சியில் ஈடுபடக்கூடாது என முடிவெடுத்து இன்று முதல் இவர்களிடமிருந்து விலகுகிறேன் என அறிவித்தார்.
இனியும் துரோகிகளோடு இருக்க மாட்டேன்
துரோகிகளோடு சேர்ந்து பணியாற்ற மாட்டேன், அதிமுகவிலிருந்து என்னை நானே விலக்கிக்கொள்கிறேன். ஜெயலலிதாவை விடப் பதவிதான் முக்கியம் என நினைத்து, இவர்கள் சுயநலத்துடன் பதவி சுகத்தை அனுபவித்துள்ளனர். ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்து, அவரை உயிரோடு அழைத்து வர இவர்களால் முடியவில்லை. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்னைப்போல லட்சக்கணக்கான தொண்டர்கள் மனக்குமுறலுடன் இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார் கோவை செல்வராஜ்.
ஓபிஎஸ் மீட்டிங்
கோவை செல்வராஜின் விலகல் ஓபிஎஸ் அணியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சில மணி நேரத்திலேயே அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார். அவர் வகித்து வந்த கோவை மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்து கோவை மாவட்டத்தை நான்காகப் பிரித்து, நான்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்து ஓபிஎஸ் உத்தரவிட்டார். இதையடுத்து, ஓபிஎஸ் தலைமையில் சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கு.ப.கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர் மற்றும் அமைப்பு செயலாளர் நாஞ்சில் கோலப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விலகல் பற்றி ஆலோசனை
அப்போது ஜெயலலிதா நினைவு நாளை அனுசரிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்வது பற்றி மாவட்ட செயலாளர்களுக்கு அங்கிருந்தபடியே அறிவுறுத்தியுள்ளார் ஓபிஎஸ். தொடர்ந்து பல்வேறு விஷயங்கள் பற்றி விடிய விடிய ஆலோசனை நடந்தது. அப்போது, கோவை செல்வராஜ் விவகாரம் தொடர்பாகவும் நீண்ட நேரம் ஆலோசித்துள்ளனர். அவர் திமுகவுக்குப் போகும் முடிவுக்கு வந்துவிட்டார், இனி நாம் பேசி பயனில்லை என ஓபிஎஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று செந்தில் பாலாஜி உள்ளிட்டோருடன் வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார் கோவை செல்வராஜ்.
ஓபிஎஸ்ஸை மிரட்டினார்
கோவை செல்வராஜின் திடீர் விலகலுக்கு என்ன காரணம் என ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பன் கூறியுள்ளார். அவர் கூறுகையில், கோவை செல்வராஜ், அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் பதவி கேட்டு கடந்த ஒரு மாதமாகக் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஓபிஎஸ்ஸையே மிரட்டினார். ஆனால், அந்த பதவிக்கு அவர் தகுதியானவர் கிடையாது என்பதால், ஓபிஎஸ் அவர் மிரட்டலுக்குப் பணியவில்லை எனக் கூறியுள்ளார்.
அதிமுகவுக்கு வரமுடியாது
மேலும் பேசியுள்ள நாஞ்சில் கோலப்பன், கோவை செல்வராஜ் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் கொண்டவர், அவர் மீண்டும் அதிமுகவிற்கு வரமுடியாது, பதவிகளை மட்டும் எதிர்பார்த்துச் செயல்படுவர்களுக்கு இது இடம் இல்லை எனத் தெரிவித்துள்ளார். பொன்னையனுடன் பேசிய ஆடியோவை வெளியிட்டு அரசியல் அரங்கில் அதிர்ச்சி கிளப்பிய நாஞ்சில் கோலப்பன், கோவை செல்வராஜ் பற்றி இப்படி பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.