3.6% வேகம்.. அமெரிக்கா, பிரேசிலைவிட அதிகம்.. இந்தியாவில் தீயாய் பரவும் கொரோனா.. இன்று புது உச்சம்
சென்னை: நாடு முழுக்க, கடந்த 24 மணி நேரத்தில் 57,118 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் கேஸ்களில் இது புதிய உச்சமாகும்.
இந்திய கொரோனா கேஸ்களின் மொத்த எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 764 பேர் கொரோனாவால் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த இறப்புகள் எண்ணிக்கை 36,511 ஆக உள்ளது.
இதுவரை, 10.94 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். மீட்பு விகிதம் இன்று காலை நிலவரப்படி 64.52 சதவீதமாக உள்ளது. இந்தியா இதுவரை மொத்தம் 1,93,58,659 மாதிரிகளை பரிசோதித்துள்ளது. கொரோனா பாதிப்பு என்பது 8.57 சதவீதமாக இருந்தது.

183 நாட்களில் 16 லட்சம்
இந்தியா 16 லட்சம் கொரோனா வைரஸ் கேஸ்களை கடக்க 183 நாட்கள் ஆகியுள்ளது. முதல் கேஸ் ஜனவரி 30ம் தேதி கேரளாவில் பதிவாகிய 110 நாட்களில் நாடு 1 லட்சத்தை தாண்டியது. நாட்டில் மொத்த கேஸ்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் மற்றும் மொத்த இறப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளனர்.

பரவல் அதிகம்
இந்தியாவின் கொரோனா கேஸ் அதிகரிப்பு விகிதம் 3.6 சதவீதமாக உள்ளது. அமெரிக்காவில் இது 1.6 சதவீதம். எனவே அதைவிட இருமடங்காகவும், பிரேசிலின் 2.3 சதவீதத்தை விட அதிகமாகவும் உள்ளது பரவல் வேகம். மொத்த பாதிப்பில் இந்த இரு நாடுகளும்தான் முதல் இரு இடங்களில் உள்ளன.

ஆந்திரா நிலை
ஆந்திரா, தற்போது, டெல்லியை விஞ்சி நாட்டின் மூன்றாவது மோசமான கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான மாநிலமாக திகழ்கிறது. கடந்த மூன்று நாட்களில் 30,000 க்கும் மேற்பட்ட கொரோனா கேஸ்கள் அங்கு பதிவாகியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,40,933 ஆக உள்ளது. அதில், 1,349 இறப்புகள் அடங்கும்.

உலக நிலவரம்
கொரோனா வைரஸ் கடந்த டிசம்பரில் சீனாவில் முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை உலகம் முழுக்க கிட்டத்தட்ட 675,000 பேர் இந்த வைரசால் பலியாகியுள்ளனர். 17.3 மில்லியன் மக்களை பாதித்துள்ளது என்று செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி. தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று விளைவுகள் பல தசாப்தங்களாக உணரப்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications