"காங்கிரஸில் ராஜ்யசபா சீட் யாருக்கு? - கே.எஸ்.அழகிரி சொன்ன முக்கிய தகவல்!
சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் 2 நாட்களில் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
15 மாநிலங்களில் காலியாகவுள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டிலிருந்து 1 சீட்டை காங்கிரஸுக்கு ஒதுக்கியது தி.மு.க.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
“காங்கிரஸ் நிலைப்பாடு இதான்.. ஆனா, நீதிமன்றம் சொல்லிட்டா ஆட்சேபனை இல்லை” கே.எஸ்.அழகிரி சொல்வது என்ன?
ராஜ்யசபா தேர்தல்
தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகப் போகும் 57 மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து 6 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவிருக்கும் நிலையில், பிரதிநிதித்துவ அடிப்படையில் தி.மு.க சார்பில் 4 பேரும், அ.தி.மு.க சார்பில் 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். தி.மு.க போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.
காங்கிரஸுக்கு ஒரு இடம்
தி.மு.கவுக்கு கிடைக்கவுள்ள 4 இடங்களில் ஒன்றை காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க தலைமை ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள 3 இடங்களில் தி.மு.க சார்பில் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க சார்பில் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் அறிவித்தார்.
2 நாளில்
இந்நிலையில் இன்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, "முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்.
ப.சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்படுவது மிகவும் கீழ்த்தரமான செயல். சிபிஐ சோதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை. எத்தனை முறை தான் சோதனை நடத்துவீர்கள். இது நேர்மையற்ற செயல். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். என்ன சோதனை, சோதனையில் கிடைத்து என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரத்திற்கு சீட் உறுதி
காங்கிரஸ் கட்சியில் ராஜ்யசபா சீட் பெறுவதற்கான போட்டியில் இருப்பவர் எனக் கூறப்பட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியே ப.சிதம்பரத்திற்கு சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது எனக் கூறியிருப்பதன் மூலம், நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு ப.சிதம்பரம் மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.