70ஆண்டுகள் காங்கிரஸ் சேர்த்த சொத்துகளை 7 ஆண்டுகளில் விற்க முனைகிறார் பிரதமர்: பா சிதம்பரம் விமர்சனம்
சென்னை: 70 ஆண்டுகள் காங்கிரஸ் சேர்த்த சொத்துக்களை 7 ஆண்டுகளில் பிரதமர் மோடி விற்க முயல்வதாக விமர்சித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம், இந்த நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் அரசு பொதுத்துறை நிறுவனம் என எதுவும் இருக்காது என்றும் சாடியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி ஆயோக் இணைந்து நேற்று வெளியிட்ட தேசிய பணமாக்கல் திட்டத்தில் அரசுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்பனை (தற்காலிகமாக) செய்து, சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்யப்பட்டுக் கூறப்பட்டிருந்தது.
15 ரயில்வே நிலையங்கள், 25 விமான நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் இருக்கும் அரசு பங்குகள், 160 நிலக்கரி சுரங்கங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கன்ட் தெரிவித்தார்.

இலக்கு நோக்கம் எதுவும் இல்லை
மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது. இந்நிலையில், இன்று மாலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பா சிதம்பரம் பேசுகையில், " இந்த தனியார்மயமாக்கல் நடவடிக்கை எந்தவொரு திட்டமிடப்பட்ட அளவுகோலும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதன் நோக்கம் மற்றும் இலக்குகளை இந்த அரசு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.

ரகசியமாக எடுக்கப்பட்ட முடிவு
இலக்குகள் மற்றும் தேவைகளை நிர்ணயிக்காமல் இதுபோன்ற மிகப் பெரிய நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது. அதேபோல சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் உள்ளவர்களுடன் ஆலோசிக்காமல் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது. இது குறித்து ரயில்வே துறை ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள், விவசாயிகள் ஆகியோரிடம் இந்த அரசு கலந்து ஆலோசித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதா? இந்த முடிவு நிதி ஆயோக் அமைப்பின் கூட்டத்தின் ரகசியமாக எடுக்கப்பட்டுள்ளது.

நிதி திரட்டல்
அரசு சொத்துக்களை தனியார்மயப்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டப் போவதாக நிதி அமைச்சர் கூறுகிறார். ஊடகங்களும் அதே செய்தியைத்தான் வெளியிடுகிறது. கடந்த 60 ஆண்டுகளாகக் கட்டமைத்த சொத்துகளை விற்பதற்கு 'நிதி திரட்டல்' என்ற ஒற்றை சொல் மட்டும் இலக்கிற்காக இருக்கக் கூடாது.

பல லட்சம் கோடி அரசு பணம்
அரசு சொத்துக்களின் வாடகை மூலம் நிதி திரட்டப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. என்ன வார்த்தைகளில் கூறினாலும், வாடகை மூலம் நிதி திரட்டப்படும் என்பதே அவர்கள் கூற வருவதன் அடிநாதம். ஆனால், இதனைக் கட்டமைப்புகளை ஏற்படுத்த அரசு எத்தனை கோடி செலவிட்டுள்ளது என்பதை அவர்கள் கூறவில்லை. தேசிய நெடுஞ்சாலைகள் தொடங்கி அவர்கள் குறிப்பிட்டுள்ள கட்டமைப்பை ஏற்படுத்தப் பல லட்சம் கோடி அரசு பணம் செலவிடப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனம் என எதுவும் இருக்காது
வாடகை மூலம் ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி ரூபாயைத் திரட்ட சலுகையில் விலையில் அவர்கள் அரசு சொத்துக்களை விற்பனை செய்கிறார்கள். சாலைகள் முதல் ரயில்வே துறை வரை அனைத்தும் விற்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இந்த தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் அரசு பொதுத்துறை நிறுவனம் என எதுவும் இருக்காது. அனைத்தும் விற்கப்பட்டிருக்கும்.

பிரதமர் மோடி
ஆண்டுக்கு 1.5 லட்சம் கோடி என்ற விகிதத்தில் 6 லட்சம் கோடியை அரசு திரட்டவுள்ளதாக நிதியமைச்சர் கூறுகிறார். நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த இந்த நிதி திரட்டப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார், கடந்த 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளின் சுதந்திர தின விழா உரையில் நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் எனப் பிரதமர் மோடி கூறியது அனைவருக்கும் தெரியும். 100 லட்சம் கோடி செலவு செய்ய 6 லட்சம் கோடி எப்படி போதுமானதாக இருக்கும்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications