பஹல்காம் தீவிரவாத தாக்குதல்.. ஏன் தனிப்பட்ட தாக்குதல் கிடையாது தெரியுமா? அதிரவைக்கும் பின்னணி
சென்னை; ஏப்ரல் 22, 2025 அன்று பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி மக்கள்.. பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். லஷ்கர்-இ-தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) அமைப்பின் தீவிரவாதிகள் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர். இந்த சம்பவம் ஒரு தனிமையான நிகழ்வோ.. தாக்குதலோ அல்ல. இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் பயங்கரவாதத்தின் நீண்ட வரலாற்றை நினைவூட்டுகிறது. வெறுப்பு தூண்டப்பட்ட சித்தாந்தத்தில் வேரூன்றி வளர்ந்தது இந்த தீவிரவாதம்.
இந்த தாக்குதலை நடத்தியவர்கள் பணத்தை விரும்பவில்லை. அவர்கள் அரசிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. மக்களை கொலை செய்ய வேண்டும் என்ற வெறுப்பு உணர்வுடன் மட்டும் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். 1990 ல் காஷ்மீரி பண்டிட்கள் வெளியேறியபோது பள்ளத்தாக்கில் எதிரொலித்த அதே கதறல்கள் அங்கே இந்த தாக்குதலின் போது கேட்டது. தகுதல் நடத்தியவர்கள் கண்களில் அதே கோபத்தை, வெறுப்பை பார்க்க முடிந்தது. .

இது மக்கள் மீதான தாக்குதல் மட்டும் இல்லை.. இந்தியா என்ற நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்!
1990 கொடுமைகள்: மறக்கப்பட்ட வரலாறு
பஹல்காம் படுகொலை பலருக்கும் காஷ்மீரி பண்டிட்கள் வெளியேற்றப்பட்ட கொடுமைகளை நினைவூட்டுகிறது. மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் காஷ்மீரி பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். காஷ்மீரில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதன் சுவடுகளை இந்த தாக்குதல் பலருக்கும் நினைவூட்டி உள்ளது. அப்போது, கோவில்கள் இழிவுபடுத்தப்பட்டன, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, பல லட்சம் குடும்பங்கள் விரட்டப்பட்டன.. வீட்டை மாற்று, இங்கிருந்து ஓடிப்போ, அல்லது செத்துப்போ என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்த 120,000 முதல் 140,000 காஷ்மீரி பண்டிட்களில், கிட்டத்தட்ட 90,000 முதல் 100,000 பேர் 1990 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தப்பி ஓடிவிட்டனர். 30 முதல் 80 வரை ஏற்கனவே அங்கே ஆட்டம் போட்ட தீவிரவாதிகள் மூலம் கொல்லப்பட்டனர்.
இன்று அதே இடத்தில்.. அதே மண்ணில் ஒன்றும் அறியாத மக்கள்.. எதுவும் அறியாத சுற்றுலா பயணிகள் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதை பார்க்கும் போது காஷ்மீரில் எதுவும் மாறிவிட்டதா? எல்லாம் சரியாகிவிட்டதா? என்ற கேள்விதான் எழுகிறது.
பாஜகவின் ஆட்சிக்கு கீழ் காஷ்மீரில் தீவிரவாதம் அடிவாங்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், 370வது பிரிவை ரத்து செய்தது பிரிவினைவாத சக்திகளுக்கு ஒரு வரலாற்று அடியாகும். ஆனால், பாகிஸ்தான் மற்றும் அதன் ஜிகாத் குழுக்கள் மூலம் வளர்க்கப்படும் பயங்கரவாத அமைப்புகள் இதை விரும்புவது இல்லை. அமைதியான, பன்மைத்துவ, மற்றும் ஒன்றுபட்ட ஜம்மு-காஷ்மீர் பற்றிய சிந்தனையை சகித்துக்கொள்ள முடியாததால், பொதுமக்களை பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து குறிவைத்து வருகின்றன. பஹல்காம் அவர்களின் விரக்தி அடையாளம். மாற்றம் அடைய தொடங்கிய ஒரு நிலத்தை.. குணமடையத் தொடங்கிய ஒரு நிலத்தை மீண்டும் பயமுறுத்துவதற்கான கடைசி முயற்சி.
உலகளாவில் தொடரும் தாக்குதல்கள்
பஹல்காமில் நடந்தது இந்திய மண்ணில் மட்டும் நடக்கும் தனி நிகழ்வு அல்ல. இதேபோல் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் இந்துக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு, வங்கதேசம் அல்லது பாகிஸ்தானில் என்று இந்துக்கள் எங்கு இருந்தாலும் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். பன்மைத்துவம், சகிப்புத்தன்மை அல்லது ஜனநாயகத்திற்கு இடமில்லாத தீவிர சித்தாந்தத்தின் காரணமாக தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.
வங்கதேசத்தில், 1951ல் 22% ஆக இருந்த இந்து மக்கள் தொகை இன்று 8% ஆகக் குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டில், இந்துக்களைக் குறிவைத்து மொத்தம் 76 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன - கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன, வீடுகள் எரிக்கப்பட்டன, மற்றும் பெண்கள் தாக்கப்பட்டனர்.
பாகிஸ்தானில், கதை இன்னும் மோசமானது. அங்கே இந்துக்களுக்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. கோயில்கள் இடித்துத் தள்ளப்படுகின்றன. மைனர் இந்துப் பெண்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகிறார்கள். 2024 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் இந்துக்களை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சர்வதேச சமூகம் கண்ணை மூடிக்கொண்டு இதை பார்த்துக்கொண்டு இருக்கிறது.
பாஜக அரசு: பயங்கரவாதத்திற்கு எதிரான அரண்
ஆனால் அவ்வப்போது தாக்குதல்கள் நடந்தால் கூட பாஜக ஆட்சியில்தான் இந்தியா திருப்தியளிப்பதில் வகையில் தீவிரவாதத்தை எதிர்த்து உள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு உறுதியான சர்ஜிக்கல் அட்டாக், காஷ்மீரி பண்டிட்களை அவர்களின் தாயகத்தில் குடியமர்த்துவதற்கான கொள்கை முடிவுகள் ஆகியவை பிரதமர் மோடி அரசாங்கம் மூலம் உறுதியாக எடுக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் அதே வேளையில், இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக பாராமுகமாக எதிர்க்கட்சிகள் இருக்கும் அதே வேளையில், பாஜக பயங்கரவாதத்திற்கும் சாமானியருக்கும் இடையே ஒரு பாதுகாப்பு சுவராக நிற்கிறது. பஹல்காமில் சிந்தப்பட்ட இரத்தத்திற்கு கண்டிப்பாக மத்திய பாஜக அரசு பதிலடி கொடுக்கும். அது தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் சிறந்த பதிலடியாக இருக்கும்.












Click it and Unblock the Notifications