"காயப்பட்டுட்டேன்".. ஸ்டாலின் சொன்ன ஒரே ஒரு வார்த்தை.. உடைந்து போன ஆர்.எஸ் பாரதி.. என்ன நடந்தது?
சென்னை: திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சை தொடர்ந்து அவரிடம் முதல்வர் ஸ்டாலின் வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆர்.எஸ்.பாரதியிடம் முதல்வர் ஸ்டாலின் தனது வருத்தத்தை நேரடியாக பதிவு செய்துள்ளார் என்கிறார்கள் திமுக வட்டாரத்தினர்.
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சமீபத்தில் பேசிய சில விஷயங்கள் திமுகவில் புயலை கிளப்பி உள்ளது. மறைந்த முன்னாள் எம்.பி.ஜின்னாவின் படத்திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கட்சியில் விசுவாசமாக இருந்தால் பதவிகள் கிடைக்காது என்று தொடங்கி சர்ச்சையான பல கருத்துக்களைப் பேசினார்.
திமுகவில் சமீபத்தில் உட்கட்சி தேர்தல் முடிந்து மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிர்வாகிகள் நியமனம் முடிந்த நிலையில் தற்போது பல்வேறு பொறுப்புகளுக்கு செயலாளர்கள் தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நீங்க மட்டும்தான் பண்ணுவீங்களா.. 'திமுக அமைப்புச் செயலாளர்’ - அழகிரியை உள்ளே இழுத்த அதிமுக நிர்வாகி!
திமுக மோதல்
திமுக மகளிரணிச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். திமுக மாணவரணி தலைவராக ராஜீவ் காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாணவரணி செயலாளராக சிவிஎம்பி. எழிலரசன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இப்படி பல பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் மாற்றப்பட்டு உள்ளனர். பல புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. சில சீனியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் கூட்டமும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிலையில்தான் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கட்சியில் விசுவாசமாக இருந்தால் பதவிகள் கிடைக்காது என்று சர்ச்சையாக பேசி இருக்கிறார்.
சர்ச்சை
அவரது பேச்சு திமுகவையே கடுமையாகத் தாக்கியது. அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கட்சிக்குள்ளே எதிரொலித்தது. குறிப்பாக, திமுகவில் ஓரங்கட்டப்பட்டிருக்கும் சீனியர் நிர்வாகிகள், ''நீங்க பேசியது 200 சதவீதம் உண்மை. உங்கள் கருத்தில் தான் நாங்கள் உடன்படுகிறோம். நாங்கள் பல காலமாக திமுகவில் இருக்கிறோம். ஆனால் நமக்கே பதவி கொடுக்கவில்லை. மாறாக மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பதவி தருகிறார்கள். புதிய நிர்வாகிகளுக்கு பதவி தருகிறாரக்ள்'' என்ற ரீதியில் ஆர்.எஸ்.பாரதியை தொடர்புகொண்டு பேசி இருக்கிறார்களாம்.
தவறான பேச்சு
அதே சமயம், கட்சியில் பொறுப்பில் இருக்கும் பலர், ''நீங்கள் பேசியது கட்சியை பலவீனமாக்கும். கட்சியில் நீங்க எதிர்பார்த்த பதவி கிடைக்கலைங்கிறதுக்காக பொதுவெளியில் கட்சியை விமர்சனம் செய்வீங்களா? இது சரியில்லைங்க. இத்தனை காலம் உங்களுக்கு பதவி இருந்ததே. இப்போதும் உங்களுக்கு பதவி இருக்கிறதே? எம்பி பதவி இல்லை என்பதால் இந்த ஆதங்கமா'' என்று பாரதியின் முகத்துக்கு முன்பாகவே அவரை கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. இப்படி, ஆதரவும் எதிர்ப்பும் கலந்து கட்டிய நிலையில், ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்தார் பாரதி. அவரின் பேச்சு திமுகவிற்குள் ஒரு சூறாவளியை கிளப்பிவிட்டுள்ளது.
அமைப்பு செயலாளர்
அப்போது, ''அமைப்பு செயலாளர் என்கிற பொறுப்பான பதவியிலிருக்கும் உங்களிடமிருந்து இப்படிப்பட்ட கருத்து வெளிவரும்னு நான் எதிர்பார்க்கலை. கட்சி உங்களுக்கு என்ன பண்ணலைன்னு நினைக்கிறீங்க? உங்க பேச்சு என்னை ரொம்ப காயப்படுத்திவிட்டது'' என்று ஸ்டாலின் சொல்ல, 'காயப்படுத்திவிட்டது' என்ற ஒற்றை வார்த்தை பாரதியை மிகவும் பாதித்து உள்ளதாம். முதல்வர் ஸ்டாலின் இவ்வளவு வருத்தம் அடைவார் என்று ஆர். எஸ் பாரதி எதிர்பார்க்கவில்லையாம். இதனால் ''என்னை மன்னிச்சிடுங்க தளபதி ; நான் சொல்ல வந்த விசயம் இதுதான். ஆனா, வாய்த்தவறி சில வார்த்தைகள் சில சமயங்களில் ஆதங்கமாக வெளிவந்து விடுகிறது.
ஸ்டாலின் பேச்சு
இனி இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறேன்'' என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறார் பாரதி. காயப்படுத்தி விட்டது என்ற தளபதியின் வார்த்தையில் ரொம்பவே ஆடிப்போய்விட்டேன். என் பேச்சு எந்தளவுக்கு அவரை புண்படுத்தியிருந்தால் அந்த வார்த்தையை அவர் சொல்லியிருப்பார். அப்படியே தளபதியின் காலில் விழுந்து மன்றாட வேண்டும் போலிருந்தது. அந்தளவுக்கு, காயப்படுத்திவிட்டது என்ற வார்த்தை என்னை என்னமோ செய்தது என்று தனது நட்பு வட்டாரத்தில் சொல்லி சொல்லி ஆதங்கப்பட்டிருக்கிறார் ஆர்.எஸ். பாரதி.