பல்லக்கு சுமப்பது அடிமை சமூகத்தில் நிலவிய முறை! இப்போது ஒத்துவராது! மா.கம்யூ. செயலாளர் பாலகிருஷ்ணன்
சென்னை: ‛‛பல்லக்கு சுமப்பது என்பது அடிமை சமூகத்தில் நிலவிய முறை. இப்போது அது ஒத்துவராது. எனவே தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேசத்தில் பல்லக்கு சுமத்தலை மாற்றுவதே சரியானதாக இருக்கும்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. பழமையான சைவ ஆதீனமாக இது விளங்குகிறது. இங்கு 27 வது ஆதீன கர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்.
இவர் 2019ல் பதவியேற்றபோது மனிதனை மனிதர்களே தூக்கும் பட்டி பிரவேச நிகழ்ச்சி நடந்தது. வெள்ளிப்பல்லக்கில் ஆதீன கர்த்தர் அமர்ந்து இருக்க மக்கள் அவரை சுமந்து வந்தனர்.

அதன்பிறகு தருமை ஆதீனத்துக்கு சொந்தமான வைத்தீஸ்வரன் கோவில், காரைக்கால் திருநள்ளார் சனிபகவான் கோவிலும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி வீரமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பல்லக்கு தூக்குவதை அவர் கண்டித்தார். இந்நிலையில் தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கு திராவிடர் கழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்தில் தருமபுரம் ஆதின மடத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதித்து கோட்டாச்சியார் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு தற்போது ஆதீன மடம் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் பிற ஆதீனங்களும் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கான தடையை கண்டித்துள்ளனர். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛மனிதர்களை, மனிதர்களே பல்லக்கில் சுமப்பது அடிமைச் சமூகத்திலும், நிலவுடைமை சமூகத்திலும் நிலவிய முறை. இப்போது அது மனித நாகரீகத்திற்கு ஒத்துவராத செயல் ஆகும். எனவே, தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேசத்தில் பல்லக்கு சுமத்தலை மாற்றுவதே சரியாக இருக்கும். அரசு உத்தரவை அமலாக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications