3 மாத பச்சிளம் குழந்தையை பட்டினி போட்டு அடித்த குடிகார பெற்றோர் - மனநல காப்பகத்தில் சிகிச்சை
சென்னையில் பச்சிளம் குழந்தையை பட்டினி போட்டு அடித்துள்ளனர் குடிகார பெற்றோர்கள். அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்ட பாதுகாப்பு அதிகாரிகள், பெற்றோரை மனநல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை: குழந்தைகள் பெற்றோர்களால் அடித்து துன்புறுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. சென்னை கிண்டியில் மூன்று மாத கைக்குழந்தையை பட்டினி போட்டு அடித்துள்ளனர் பெற்றோர்கள். அந்த குழந்தையை மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர் . பெற்றோர்களை மனநல காப்பக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிண்டியில் 3 மாத குழந்தையை பட்டினி போட்டு அடித்துள்ளனர் குடிகார பெற்றோர். நேற்றிரவு குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு இரவு 10.30 மணியளவில் மது அருந்தும் பெற்றோர்களால் ஒரு குழந்தை அடிக்கப்படுவதாக அழைப்பு வந்தது. இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் கிண்டியில் உள்ள நாயக்கர் ரெட்டி தோட்டத்திற்கு சென்று மீட்டனர்.

பார்க்கவே மனநலம் பாதிக்கப்பட்டது போல இருந்த அந்த பெண்ணின் பெயர் சத்யா என்று அக்கம் பக்கத்தினர் கூறினர். அவளது கணவன் சரவணன் கூலித்தொழிலாளி. இருவரும் அடிக்கடி குழந்தையை அடிப்பதாகவும், இரவு முழுவதும் அலறல் சத்தம் கேட்பதாகவும் அக்கம்பக்கத்தினர் கூறினர்.
தம்பதியர் குடிபோதையில் இருக்கும் போது குழந்தை அழுதால் அவர்கள் அதை அடிப்பார்கள், என்று மீட்புக் குழுவில் இருந்த சைல்ட்லைன் பிரிவு உறுப்பினர் ஒருவர் கூறினார். தம்பதியினர் பேசியது முன்னுக்கு பின் முரணாக இருக்கவே, கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஏடி ரமேஷ் கார்த்திக் , பெற்றோரும் மூன்று மாத குழந்தையும் மிக சிறிய, அழுக்கான அறையில் வசித்தனர். குழந்தை தரையில் படுத்திருந்தது, உணவு பாக்கெட்டுகள் மற்றும் அழுக்கு துணிகளால் சூழப்பட்டுள்ளது. குழந்தையை அழைத்துச் செல்லும்போது கூட, தாய் பதிலளிக்காமல் அமைதியாக அதிகாரிகளைப் பார்த்துக்கொண்டிருந்ததாக கூறினார்.
குழந்தை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்தப் பெண்ணின் தலைமுடி கலைந்திருந்தது. பல நாட்கள் குளிக்காதது போல் இருந்த இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர். குழந்தைக்கு ஒரு தன்னார்வலர் ஒதுக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. தன்னார்வலரும் டாக்டர்களும் குழந்தைக்குப் பசியாக இருப்பதாகக் கூறினர், பாட்டில் பால் கொடுத்த சில நிமிடங்களில் அந்த குழந்தை அதை குடித்து முடித்து விட்டது என்று ரமேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
சின்னச்சிறு குழந்தைகள் குறும்பு செய்தால் அதை ரசிக்காமல் அடிப்பது பல பெற்றோர்களின் வழக்கமாக உள்ளது. சாதாரணமாக அடிப்பதோடு அல்லாமல் குடும்ப பிரச்சினையில் பெற்ற குழந்தைகளை அடித்து சித்ரவதை செய்கின்றனர் சில பெண்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கடந்த மே மாதம் கணவன் மனைவி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த இளம்பெண் தனது 7 மாத குழந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் தொடர்ந்து தடுத்தபோதிலும் அவர் கண்டுகொள்ளாமல் குழந்தையை அடித்து துன்புறுத்தினர்.
ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த உறவினர்கள் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த குழந்தையை மீட்டுள்ளனர். மேலும், இளம்பெண் அந்த குழந்தையை தாக்கிய வீடியோவையும் ஆதாரமாக காண்பித்தனர்.
இதையடுத்து, குழந்தையின் தாயிடமும் இதுகுறித்து விசாரணை நடத்திய காவலர்கள் இனிமேல் அடிக்கக்கூடாது என்றும் மீண்டும் இது போல நடந்தால் உன்னை சிறையில் அடைத்து விடுவோம் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
செஞ்சி சம்பவம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த துளசி என்ற பெண் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி தனது 2 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய துளசி, அதை வீடியோவாக எடுத்து தன் மொபைலில் வைத்துள்ளார். அவரே காயமடைந்த குழந்தையை புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
கடந்த 40 நாட்களுக்கு முன் துளசியின் மொபைலை வடிவழகன் பார்த்தபோது, அதில் குழந்தையை துளசி தாக்கும் நான்கு வீடியோக்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதில், குழந்தையை, துளசி கடுமையாக தாக்கியும், குழந்தையின் காலை முறுக்கி ஒடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது. இதனை வடிவழகன் தன் மொபைலுக்கு அனுப்பியுள்ளார் துளசி. குழந்தைகளை தன்னுடன் வைத்துக்கொண்ட வடிவழகன், மனைவி துளசியை அவரின் தாய் வீடான ஆந்திர மாநிலத்தில் உள்ள ராம்பள்ளியில் விட்டுவிட்டு வந்துவிட்டார். வடிவழகன் சேமித்து வைத்த வீடியோக்கள் உறவினர்கள், நண்பர்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், இது குறித்து, சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் வடிவழகன் கொடுத்த புகாரின் பேரில், 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications