விவசாயிகளின் பாரத் பந்த்... வெற்றி பெற செய்யுங்கள்... அனைத்துகட்சி தலைவர்கள் வேண்டுகோள்!
சென்னை: வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி 8-ஆம் தேதி விவசாயிகள் அறிவித்துள்ள நாடு தழுவிய முழு அடைப்பை வெற்றியடைய செய்ய வேண்டும் என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த முழு அடைப்பில் பங்கேறுமாறு தமிழக விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள், பொதுமக்களுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு நடத்திய எந்த பேச்சுவார்த்தையும் முடிவு கிடைக்கவில்லை.
தீர்வு இல்லையெனில் 6 மாசமானாலும் சரி.. இங்கேயே இருப்போம்.. குளிரெல்லாம் பிரச்சினையில்லை.. விவசாயிகள்
உலக கவனம்
இது தொடர்பாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC)-வின் செயலாக்கத்தில் பத்தாவது நாளாக, இந்திய விவசாயிகளின் போராட்டம் டெல்லிப் புறநகரின் சாலைகளில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. உலகக் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
போர்க்களம்
எங்கு பார்த்தாலும் உழைக்கும் வர்க்கத்தின் எண்ணிலடங்காத் தலைகள், உழவர்களின் எழுச்சிமிகு அணி வகுப்புகள் எனத் தலைநகர் டெல்லி அறவழிப் போராட்டத்தின் மூலமாகவே புதுமையான போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.
கண்டனம்
இதுவரை விவசாயிகளுடன் மத்திய பா.ஜ.க. அரசு நடத்திய பேச்சுவார்த்தைகளில் ஆக்கபூர்வமாக எதையும் சொல்ல மறுக்கிறது. இந்திய உணவுப் பாதுகாப்பின் உயிர் மூச்சைப் பறித்து வேளாண்மையை அடியோடு அழிக்கும் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவோம் என்றோ - அதன் பிறகு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றோ, மத்திய பா.ஜ.க. அரசு கொள்கையளவில் ஒப்புக்கொள்ள முன்வரவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.
கோரிக்கை ஏற்கவில்லை
கடும் குளிரிலும், ஆறு மாதத்திற்குக் கூட உணவுகளைத் தயார் செய்தும் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனாலும் மத்திய பா.ஜ.க. அரசு கோரிக்கைகளுக்கு, "பேச்சுவார்த்தை" என்று இழுத்தடிக்கிறதே தவிர - அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கவில்லை.
நாட்டின் தளபதிகள்
மத்திய அரசு விசாயிகளின் வார்த்தைக்கு மதிப்பு அளிக்காததால் விசாயிகள் டிசம்பர் 8-ஆம் தேதி 'பாரத் பந்த்' அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். விவசாயிகள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கான மூலதனம். சமூகக் கட்டமைப்பின் அசைக்கமுடியாத அஸ்திவாரம். இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டமைத்து - நம்பிக்கையூட்டி - உலக அளவில் இந்தியாவிற்குப் பெருமை தேடித்தரும் தளபதிகள்.
ஏற்கிறோம்
எனவே அவர்கள் "மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறுங்கள்" என்று முன்வைக்கும் கோரிக்கை முழுக்க முழுக்க நியாயமானது என்று, தொடர்ந்து இந்தச் சட்டங்களை எதிர்த்து வரும் அனைத்துக் கட்சித் தலைவர்களாகிய நாங்கள் அனைவரும் உறுதியாகக் கருதுகிறோம். டிசம்பர் 8-ஆம் தேதி - செவ்வாய்க்கிழமை அன்று நடத்த அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய முழு அடைப்பிற்கு மனமார்ந்த ஆதரவு அளிக்கிறோம்.
குரல் எழுப்ப வேண்டும்
விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பாதுகாக்க, தமிழத்தில் இருந்து கிளம்பும் இந்த ஆதரவுக் குரல் - அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு எழுச்சிக் குரலாக - அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் துணை நிற்கும் குரலாக இருக்கட்டும்.
வெற்றி பெற செய்யுங்கள்
ஆகவே தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூகநல அமைப்புகள்,மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து, "பாரத் பந்த்"தை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.