"பருத்தி வீரன்" முத்தழகிக்கு நடந்ததை விட பெரிய வன்முறை.. அமீருக்கு ஆதரவாக இறங்கிய நந்தா பெரியசாமி
சென்னை: பருத்தி வீரன் படத்தில் முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறையை அதன் இயக்குநர் அமீருக்கு நடத்தியிருக்கிறார்கள்... கார்த்தி என்ற பருத்திவீரனை நம்பிய முத்தழகின் முடிவு வேண்டுமானால் துயரத்தில் முடியலாம் இயக்குநர் அமீருக்கு அப்படியல்ல.. என்று இயக்குனர் நந்தா பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பருத்திவீரன் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா, அந்த படத்தின் இயக்குனர் அமீர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். அமீர் அதிக செலவு செய்தார், படத்தின் காசை திருடினார். அது எனக்கு முதல் படம். ஆனால் நான் கொடுத்த காசை வைத்து படத்தை எடுக்காமல் பணத்தை திருடிவிட்டார் என்று குற்றச்சாட்டு வைத்தார். ஞானவேல் ராஜாவின் இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் அமீர் நீண்ட நெடிய விளக்கத்தை அளித்து இருந்தார். அமீருக்கு ஆதரவாக இயக்குனரும் நடிகருமான சசிகுமார், சமுத்திரக்கனி, சேரன் என பலரும் கருத்து தெரிவித்தனர். ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஆனாலும் இதை ஏற்க முடியாது என சமுத்திரக்கனி உள்ளிட்டோர் கடுமையாக சாடி பதில் அறிக்கை வெளியிட்டனர்.
நந்தா பெரியசாமி: எந்த பொதுவெளியில் அமர்ந்து அருவருப்பான உடல் மொழியால் சேற்றை வாரி இறைத்தீர்களோ.. அதே பொது வெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்..! என்று சமுத்திரக்கனி ஞானவேல் ராஜாவை காட்டமாக விமர்சித்தார். இந்த நிலையில், அமீருக்கு ஆதரவாக பிரபல இயக்குனர் நந்தா பெரியசாமியும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நந்தா பெரியசாமி கூறியிருப்பதாவது:-
துரோகமற்ற பருத்தி வீரன்களை: பருத்தி வீரன் படத்தில் முத்தழகிற்கு நடந்த கொடுமையை விட மிகப்பெரிய வன்முறையை அதன் இயக்குநர் அமீருக்கு நடத்தியிருக்கிறார்கள்... கார்த்தி என்ற பருத்திவீரனை நம்பிய முத்தழகின் முடிவு வேண்டுமானால் துயரத்தில் முடியலாம். இயக்குநர் அமீருக்கு அப்படியல்ல... அவர் இன்னும் வீறு கொண்டு எழுவார். படைக்கு அஞ்சாத அவருக்கு கை கோர்க்க தம்பிமார்கள் பலரும் இருக்கிறோம்...
தொழுகை தவறாத அவர் அருகே இறைவனும் சத்தியமும் இருக்கிறது. பகைவனுக்கும் அருள்கின்ற அவர் புன்னகை இன்னும் அவரை பலமாக்கும். துரோகமற்ற பல பருத்தி வீரன்களை அவர் இனி தொடர்ந்து படைப்பார். மாசற்ற ஒரு அற்புதமான மனிதனுக்காக நாம் ஒன்று கூடுவோம்... அவர் பக்கம் துணை நிற்போம்... இவ்வாறு அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications