"புரட்டாசி" மாசமா இது? “மீன்” வாங்க கூட்டம் அள்ளுதே.. சென்னை காசிமேடு மீன் வியாபாரிகள் “ஹேப்பி”
சென்னை: பொதுவாக தமிழ்நாட்டில் தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவு உண்பதை தவிர்த்துக்கொள்வது பாரம்பரியமாக இருந்து வரும் நிலையில், தற்போது புரட்டாசி மாதத்திலும் மீன் வாங்க சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதி வருகிறது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு, மாடு, கோழி, கடல் உணவுகளின் விலை கடுமையாக சரிவடையும். இதற்கு முக்கிய காரணம் புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான மக்கள் அசைவ உணவை உண்ணக்கூடாது என்ற சடங்கை பின்பற்றுகின்றனர்.
அதேபோல் இந்த ஆண்டும் புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்தே, ஆடு, மாடு, கோழி, முட்டை, மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. இதனால் இம்மாதம் கால்நடைகள், மீன்களை குறைவான அளவிலேயே வாங்கி வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனர்.
புரட்டாசி மாசம்.. அமாவாசை.. ஞாயிற்றுக்கிழமை சாம்பார் சாப்டுற அந்த வேதனை இருக்கே சார் வேதனை!
சென்னை காசிமேடு
ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் இந்த புரட்டாசி மாதத்திலும் மீன் வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது. வழக்கமாகவே ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தன்று சென்னையின் பெரும்பாலான வீடுகளில் அசைவமே மதிய உணவாக இருக்கும். புரட்டாசி மாதத்திலும் அதை சென்னைவாசிகள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு இன்று காசிமேட்டு மீன் மார்க்கெட்டில் குவிந்த கூட்டமே உதாரணம்.
புரட்டாசி மாதமா இது?
மற்ற மாதங்களில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் இன்றைக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத அளவுக்கு அசைவ பிரியர்களால் கலை கட்டிய காசிமேடு மீன் மார்க்கெட் திருவிழா போல காணப்பட்டது. சென்னை காசிமேட்டில் பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்களை வாங்க அசைவப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
அலைமோதிய கூட்டம்
ஆனால் புரட்டாசி மாதம் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மீன் விற்பனை மந்தமாக இருந்த நிலையில் இன்று காசிமேட்டில் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. நள்ளிரவு 2 மணி அளவில் ஏல முறையில் மீன் விற்பனையை மொத்த வியாபாரிகள் தொடங்கினர். சில்லறை வியாபாரிகள் அவற்றை ஏலத்தில் வாங்கி அதிகாலை முதல் விற்பனையை தொடங்கினர். கடந்த 2 வாரங்களைபோல் இந்த வாரமும் விற்பனை மந்தமாக இருக்கும் என்று நினைத்த வியாபாரிகளுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது மக்கள் கூட்டம்.
மீன்கள் விலை
கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட சற்று அதிகமாகவே விற்பனை செய்யப்படுகிறது. வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1200, சங்கரா ரூ.400 முதல் ரூ.600 வரை, வவ்வால் ஒரு கிலோ ரூ.800, நெத்திலி ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.350,
இறால் ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் மக்கள் அதிகளவில் மீன்களை அள்ளிச்சென்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.