லீவு முடிந்தது..ஊரிலிருந்து சென்னை திரும்பும் மக்கள்..போக்குவரத்து நெரிசலில் திணறும் பரனூர் டோல்கேட்
சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை, தொடர் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து ஏராளமானோர் சென்னை திரும்புவதால் பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன.
தேர்வு விடுமுறை, வார இறுதி நாள்களுடன் சேர்ந்து ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறைகள் வந்ததால், சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பேருந்து மற்றும் வாகனங்களில் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலை மோதியது. இந்த நிலையில் விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியிலிருந்து கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் வரையிலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தற்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தாம்பரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் தீபாவளி பண்டிகை விடுமுறை தொடங்கி விடும். தீபாவளி பண்டிகையை கொண்டாடவும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். எனவே அன்றைய தினம் ஊருக்கு செல்லும் போதும், விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பும் போதும் இது போல கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். பரனூர் சுங்கசாடிவகளில் வார இறுதியில் உள்ள விடுமுறை நாட்கள் முடிந்து சொந்த ஊர்களிலிருந்து திரும்பும் மக்களால் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது என்பது வாகன ஓட்டிகளின் கவலையாகும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதும் வாகன ஓட்டிகளில் எதிர்பார்ப்பாகும்.












Click it and Unblock the Notifications