தீவிரமடையும் மழை! தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டும்.. அமைச்சர் அறிவுரை
சென்னை: மழையால் தமிழகத்தில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்றும் பொதுமக்கள் மழை பெய்யும் நேரங்களில், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மிகவும் பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தமிழகம் முழுவதும் தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. சென்னையில் இன்று காலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையின் தற்போதைய மழை நிலவரம், நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். மழை அதிகமுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முதல்வரின் இந்த ஆலோசனையின் போது வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனும் உடன் இருந்தார். முதல்வரின் ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
மு.க ஸ்டாலின் ஆய்வு: முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழக அரசினுடைய கட்டுப்பாட்டு அறைக்கு வந்தார். மழை நிலவரங்களை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். எந்தெந்த பகுதிகளில் மழை வரும் என்பதை பார்த்து புரிந்துகொண்டு, அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுக்கு சொல்லியிருக்கிறார். முதல்வருடைய அதிகாரிகளும் செயலாளர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் தகுந்த உத்தரவுகளை கூறியுள்ளார்.
இதேபோல் கடலூர், நாகப்பட்டினம் ஆட்சியர்களை செல்போனில் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டு புரிந்துகொண்டு அவர்களுக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதுவரைக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டு தெரிந்துகொண்டு பணிகளை துரிதப்படுத்துமாறு பேசினார். வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்களுடன் நேரடியாக தொலைபேசி வாயிலாக பேசினார்.
கவனமாக இருக்கனும்: அவரிடம் அடுத்த 3 நாட்களுக்கு மழை நிலவரம் என்ன என்றும், பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பது குறித்தும் நேரடியாக அவரிடம் பேசி கேட்டறிந்தார். மழையால் தமிழகத்தில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. பொதுமக்கள் மழை பெய்யும் நேரங்களில், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் மிகவும் பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டும்.
மண் வீடுகள், குடிசை வீடுகள் பழைய வீடுகளில் குடியிருப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் ஆய்வு மையங்களுக்கு சென்று தங்கியிருக்க வேண்டும். குறிப்பாக மின்சாரம் தாக்கி இறப்பதும், மின்னல் தாக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் தான் இருக்கிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications